மாகாண சபைக்கான அதிகாரங்களை மேலும் குறைத்து சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்; அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளுர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது தமிழ்ப் பேசும் மக்ளிடையே இன்றைய அரசு தொடர்பான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்தும். அத்துடன் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பாராமுகத்தன்மை குறித்து சர்வதேசமும் சந்தேகக் கண்ணோடு நோக்கக் கூடிய ஒரு வாய்ப்பினை இந்தச் சட்ட மூலம் வழங்குமென புளொட் இயக்கத் தலைவர் ரீ. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது, இன்றைய நெருக்கடியான கட்டத்திலும் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக சர்வதேசம் உன்னிப்பாகத் தமது கவனத்தைச் செலுத்திக் கொணடிருக்கும் போதும் இலங்கை அரசாங்கம் இவ்வாறனதொரு சட்ட மூலத்தின் வாயிலாகக் தமிழ்பேசும் மக்களின் உள்ளுராட்சி பிரதிநிதித்துவத்தில் கைவைப்பது ஒரு காலோசிதமான செயலல்ல. அத்துடன் இன்று இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் குறைந்த பட்சமாக வழங்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரங்களிலிருந்து மேலும் சிலவற்றைப் பிடிங்கியெடுப்பதானது அதிகாரப் பரவலாக்கத்தையே கேள்விக்குட்படுத்தி விடும். எதிர்காலத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை புதிய சட்ட மூலத்துக்கு அமைவாகவே அரசு நடத்தப் பார்க்கிறது.
இந்த அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமானால் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் வாழக் கூடிய தமிழ் பேசும் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தில் அதிகளவில் இழப்புகளை எதிர்நோக்குவர். வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் பெருன்பான்மை இன மக்களின் பிரதேசங்களை எல்லைப் புறமாகக் கொண்ட தமிழ்ப்பேசும் மக்களின் பிரதேசங்களும் அதே போன்று வவுனியா மாவட்டமும் பாதிக்கப்படுவதுடன் மலையகம் உட்பட இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளில் சிறுபான்மை இனமக்கள் பிரதிநிதித்துவத்தில் பாரிய இழப்பை ஏற்படுத்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.