இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களா? – வீரகேசரி ஆய்வு

Wanni_Warவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வும் நிலையான அமைதியும் கிடைக்கும் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.

ஆனால் இன்னொரு புறத்தில் இந்த மக்களை நிரந்தரமாகவே இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரித்துக் காட்டும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை “புலிகளின் பிடியில் இருந்து தப்பி வரும் மக்கள்’ என்ற அடைமொழியுடன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் அதே வகையானதொரு நிலைக்குள்தான், இங்கும் தள்ளுகிறோம் என்பதை மறந்து விடுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்கள் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்ற முகாம்களுக்குள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர். இங்கே “அடைக்கப்படுகின்றனர்’ என்ற பதம் சிறைகளில் அடைக்கப்படுவது என்பதற்கு எந்தவிததிலும் குறைவானதாக இருக்க முடியாது. ஒரு சிறைக்குள் இருப்பவர்கள் வெளியாருடன் தொடர்பு கொள்வதற்கு, வெளியே செல்வதற்கு, அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு தடுக்கப்பட்டிருப்பார்களோ, அது போன்ற நிலை தான் வன்னியில் இருந்து வந்த மக்களுக்கும் உள்ளது. இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாது. அவர்களின் உறவினர்கள் கூட உள்ளே சென்று பார்க்க முடியாதுள்ளது.

ஐ.நா.வின் உதவித் திட்ட நிவாரணத்தைப் பெற்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவும் ஒரு சிறை வாழ்க்கை தான். சுற்றிவர இராணுவத்தினரும், பொலிஸாரும் காவல். உள்ளேயும் அவர்கள் தாராளமாக நடமாடுவர். இந்த முகாம்களே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.

இதுபற்றி சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் தான் இராணுவத்தினரின் பொறுப்பில் இருந்து விடுவித்து மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத் திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.  இது பெயரளவுக்குத் தான் இருக்குமே தவிர நிச்சயம் படைத்தரப்பின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் தான் முகாம்கள் இருக்கும். வன்னியில் இருந்து வரும் மக்களிடையே புலிகள் மறைந்திருக்கலாம். அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு படையினர் செயற்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

srilanka_idp.jpgஆனால் ஒரு சில புலிகளைப் பிடிக்க அரசாங்கம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் நலன்களை முடக்கிப் போட்டு அவர்களின் சுதந்திரமான அசைவுகளைக் கட்டுப்படுத்தி நடைப்பிணங்களாக்கி வைத்திருப்பது சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பெரும் விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் படும் வேதனைகள் பற்றி சர்வதேச பிரதிநிதிகளே தமது கள ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தனது இறுக்கமான போக்கில் இருந்து தளரத் தயாராக இல்லை. அமைச்சர்கள், அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்படும் சில அரசியல்வாதிகள் மட்டும் இடம்பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது. ஆனால் இவர்களின் காதுகளுக்குள் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் ஏறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான பிரச்சினைகளை வெளியே சொல்வது அரசாங்கத்துக்கு, இலங்கை தேசத்துக்குச் செய்யும் துரோகமாக அவர்கள் பார்ப்பார்கள். வன்னியில் வாழ்ந்த மக்களை புலிகள் கட்டாயமாகத் தான் படைகளில் சேர்த்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அப்படி கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, தப்பி வந்தவர்களைக் கூட அரசாங்கம் வவுனியாவில் புலிகளாகத் தான் பார்க்கிறது. இதை விடப் பரிதாபம் புலிகள் 55வயதுக் குட்பட்டோருக்கு கட்டாய பயிற்சி கொடுத்ததாக அரசாங்கமே சொல்கிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களைக் கூட அரசாங்கம் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து வெளியே போக விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.

கடந்த வாரம் தான் 60 வயதுக்கு மேற்பட்டோர் வெளியே சென்று வசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்னமும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு வாழும் அவலம் தான் காணப்படுகிறது. இந்த அடைபட்ட வாழ்வு எதுவரை நீடிக்கும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதற்கு யாரும் உறுதியான பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தநிலையில் தான் அரசாங்கம் வன்னியில் இருந்து வந்த மக்கள் அனைவருக்குமே விசேட அடையாள அட்டையை வழங்கப் போவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.

இது அந்த மக்களை அரசாங்கம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த முற்படுகிறது என்பதற்கான அடையாளமாகவே தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர், வவுனியாவில் இருந்து கொழும்பு செல்வதற்கு தமிழ்மக்களுக்கு பாஸ் தேவைப்பட்டது. இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இவ்வாறான பாஸ் நடைமுறை சட்ட விரோதமானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அதே பாஸ் நடைமுறையை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோருக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதைவிட அங்கு விசேட அடையாள அட்டை நடைமுறையும் இருக்கிறது. இது பற்றி எவரும் வழக்குத் தாக்கல் செய்ய முனையவில்லை. இப்போது வன்னி மக்களுக்கும் விசேட அடையாள அட்டை கொடுத்து அவர்களை ஏனைய மக்களிடத்தில் இருந்து பிரித்துக் காட்டும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரகடனப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை முக்கியமானதாக இருக்கும் போது அதற்கு மாறாக விசேட அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பது குறிப்பிட்ட மக்களை தரக் குறைவாகப் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.

யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே விசேட அடையாள அட்டையைப் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர். 18வயதுக்கு உட்பட்டோரை படைகளில் சேர்த்தால் அது மிக மோசமான மனித உரிமை மீறலாக இருக்கும்போது 10வயதுச் சிறுவனையே அடையாள அட்டையுடன் அலைய விடுவது மட்டும் மனித உரிமையை மதிக்கும் செயலாகுமா? தமிழ் மக்களை விடுவிப்பதற்காகப் போர் நடத்துவதாகவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் வசந்தம் வீசும் என்றும் சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் அந்த மக்களை நிரந் தரமாகவே புலிகளாக நோக்க வைக்கும் ஒரு காரியத்தை இப்போது செய்து கொண்டிருக்கிறது. இடம் பெயர்ந்து வந்த மக்களை பிரித்துக் காட்டும் விசேட அடையாள அட்டையை நடைமுறைக்குக் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் எவருமே இது பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இது ஒன்றே இடம்பெயர்ந்து வந்த மக்களின் துயரங்கள் எவ்வளவு தூரம் மறைக்கப் பட்ட நிலையில் இருகிறது என்பதற்கு போதுமான சாட்சி.

 நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 4/6/2009

Show More
Leave a Reply to john Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Susan
    Susan

    நல்லதொரு ஆய்வு.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளின் பகுதிகளில் இருந்து வருவோரை ஒரேயடியாக வெளியே சுதந்திரமாக விடுவது உண்மையிலேயே ஆபத்தானது. அங்கே யார் இருக்கிறார்கள் என்பதை யார் அறிவார்?

    சாதாரண மக்கள் போல புலிகளும் வரலாம். வந்து கைதாகியுள்ளார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் அடங்கியிருந்தவர்கள் இங்கே வந்ததும் உடனடியாக சுதந்தரமாக திரிய வேண்டும் என நினைப்பதோ? அல்லது இதுபோன்ற கட்டுரைகளை வரைவதோ கடினமான விடயமல்ல.

    அதனால் ஏற்படும் அனர்த்தங்களில் பாதிக்கப்படும் அனைத்து அப்பாவிகளுக்கும் யார் பதில் சொல்வது?

    இங்கே அரசு சரியென சொல்ல வரவில்லை. இப்போதே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வந்தவர்களுக்கு படிப்பதற்கான வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மனிதநேய அமைப்புகள் உள்ளே பணி புரிகின்றன. வைத்திய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல கடும் நோய்வாய்ப்பட்டால் கொண்டு செல்ல அம்பியுலன்ஸ்கள் தயாராக உள்ளன.

    இவர்கள் வெளியே போக முடியாதது போல வெளியேயிருந்து யாரும் தாக்குதல் தொடுக்காதவாறு பாதுகாப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் மோதல்களில் இடத்துக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக அனைத்தும் வேண்டும் என்பது இயலக்கூடிய காரியமல்ல?

    ஏன்? உலகம் முழுக்க தமிழர்கள் இருக்கிறார்களே? அவர்களே ஏதாவது வழியில் உதவ அரசினூடாக நாடலாமே? TRO போன்றவைக்கு இதற்காகத்தானே பலர் பணத்தை கொடுத்தார்கள்?

    சுமார் 25 வருடங்கள் புலிகளோடு வாழ்ந்தவர்கள் அடுத்த பகுதி வாழ்வுக்கு திரும்ப சற்று காலம் பிடிக்கும். ஏற்கனவே அங்கிருந்து சமாதான காலத்தில் வந்தவர்களே தற்கொலை தாக்குதல்களை நடத்தினர். இன்னும் அவர்களில் பலர் இருக்கவே செய்கின்றனர்.

    இவர்களது சுதந்திர நடமாட்டம் ஏற்கனவே அரச பகுதிகளில் மறைந்து வாழும் புலிகளுடைய தொடர்பை ஏற்படுத்த வாய்ப்பளிப்பதோடு அந்த உணர்வுகளோடு நாடு முழுவதும் பல தாக்குதல்களை அல்லது தற்கொலை தாக்குதல்களைத் தொடுத்து முழு நாட்டிலும் 1983 போன்ற இனக் கலவரத்தை உண்டு பண்ணலாம்.

    அது இங்கே நிம்மதியாக இருக்கும் தமிழர்களது வாழ்வுக்கும் உடமைகளுக்கும் பங்கத்தையே விளைவிக்கும். இந்த முகாகளில் இருக்கும் மக்கள் மெதுவாக அந்த மனநிலைகளில் மற்றும் பாதிப்பிலிருந்து விடுபட்டு அமைதியான பொது வாழ்வுக்கு திரும்ப அரசு மட்டுமல்ல புலிகளின் அழுத்தங்களற்ற உலக அமைப்புகள் கை கொடுக்கலாம்.

    இது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனின் கடமையுமாகும். புலிகள் இதற்குள் நுழைந்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிடும்.

    Reply
  • lio
    lio

    non tiger supporters living as a second class citizens :where ever they live – only president Magintha Rajapaksha gave them a chance to prove them self they also took part in the eelam strugle and pirapakaran hav’t done anything to self determination

    Reply
  • john
    john

    Maya you are right thare is lots of LTTE terror peoples in the camp the SL -NIB knows very well and ther are working with these matters NIB recruited some ex LTTE to identify these tigers and separate them until the war end.

    remember these LTTE members have no arms and no where near to the dumpped Armes – this is important we all humans have to respect them and their situation whow they all involved in the terror war.

    Reply