இலங் கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்ற ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாக போரிடுகின்றனர். அந்த போர் முனையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையேற்று நேரடியாக போரிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே அண்மையில் இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி (வயது 24) காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்கும் பணியின் முக்கிய பொறுப்பாளரான இவர் புலிகளின் விமானங்களுக்கான குண்டுகளைத தயாரிப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானத்தளம் மீதும் கொலன்னாவை எண்ணெய்க் குதம் மற்றும் முத்துராஜவெல எரிவாயு களஞ்சியம் ஆகியவற்றின் மீதும் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களை இவரே திட்டமிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக இவர் புலிகளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.