கொழும்பு நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கான குறுகியகால நடவடிக்கையொன்றை மேற்கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமை கொழும்பு மாநகர சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பல பகுதிகளிலும் குப்பை கூளங்களைச் சேகரித்துக் கொட்டுவதில் மாநகர சபை ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மாநகர சபை எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் குப்பை கூளங்கள் அகற்றப்படவில்லை.
இதனால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதுடன் அனைத்துமக்களும் பல்வேறு வகையிலும் பெரும் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர். இதையடுத்து கொழும்பு மாநகர சபையின் இயலாத்தன்மையாலும் மோசமான நிர்வாகத்தாலும் கொழும்பு புளுமெண்டல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூளங்களால் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டகுழுவினர் தாக்கல் செய்த இந்த மனுவில் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரணைக் கெடுத்த உயர் நீதிமன்றம் கழிவுப்பொருட்களை துறைமுக அதிகாரி சபைக்குச் சொந்தமான காணியிலும் மகரபகுதியில் இடமொன்றிலும் சேகரிப்பது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் கழிவுப் பொருட்கள் மீள் சுழற்சிக்கான நீண்டகால செயற்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநகர சபை எல்லைக்குள் தேங்கியுள்ள குப்பை கூளங்களை அகற்றுமாறு பொது அமைப்புக்கள் பலவும் மாநகர சபை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்ததும் தெரிந்ததே. தற்போது நீதிமன்றத் தலையீட்டால் செவ்வாய்க்கிழமை குப்பை கூளங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்கது.
பல்லி
குப்பை மீது உள்ள அக்கறைகூட எம்தமிழர் மீது காட்ட அரசு தயங்குவது ஏனோ??