“மார்ச் 11 புதன்கிழமை காலையில் ஆட்டோவில் பாடசாலைக்குச் சென்ற எனது மகள் வர்ஷாவை மார்ச் 13 வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில், திருகோணமலை நகரில் வடிகால் வாய் அருகில் உரப்பை ஒன்றினுள் சடலமாகக் கண்டேன் . கைகள் , கால்கள் ,முகம் என்பன கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சடலத்தை வர்ஷாவினுடையது என்று அந்த இடத்தில் வைத்து அடையாளங் காட்டினேன் ‘ என்று 37 வயதான கிருபைராணி ஜூட் ரெஜி, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.எல்.ஏ.மனாப் முன்னிலையில் நடைபெற்ற மரணவிசாரனையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் சொன்னதாவது;
“எனது கணவர் ஜூட் ரெஜி டோஹாவில் தொழில் செய்கின்றார். எனக்கு இரண்டு குழந்தைகள் . மூத்தவர் மகன் , இரண்டாவது குழந்தையே வர்ஷா இருவரும் வழமையாக முச்சக்கர வண்டியிலே பாடசாலைக்கு செல்வார்கள் ஆட்டோசாரதி சித்திரவேலு இருவரையும் தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று பாடசாலையில் விடுவார். பாடசாலை முடிந்தவுடன் இருவரையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விடுவார். மகள் வர்ஷாவை நண்பகல் 12 மணியளவில் ஆட்டோவில் சித்திரவேலு கொண்டு வருவார். மகனை பிற்பகல் 2 மணிக்குக் கூட்டிவருவார். சம்பவதினம் மார்ச் காலை 11.50 மணியளவில் ஆட்டோ சாரதி சித்திரவேலு தொலைபேசி மூலம் பாடசாலையில் வர்ஷாவைக் காணவில்லை என்று எனக்குத் தெரிவித்தார். வேறுயாரும் வீட்டிற்கு வர்ஷாவைக் கூட்டி வந்துவிட்டார்களா என்றும் அவர் என்னைக் கேட்டார். அப்படி ஒருவரும் கூட்டிவரவில்லை என்று நான் பதிலளித்தேன்.
மீண்டும் 10 நிமிடங்கள் கழித்து சாரதி சித்திரவேல் வர்ஷாவைக் காணவில்லை என்று கூறினார். ஆசிரியரிடம் அது பற்றிக் கூறுமாறு நான் அவருக்குச் சொன்னேன் . ஆசிரியை என்னோடு பேசினார் . மீண்டும் வர்ஷாவைத் தேடிப்பார்க்கும்படி ஆசிரியையிடம் தொலை பேசியில் கூறி விட்டு , பாடசாலை நோக்கி உடனே புறப்பட்டேன்.
பாடசாலைக்குச் சென்றவுடன் ஆசிரியைகளும் நானும் பாடசாலை வளாகத்தில் வர்ஷாவைத் தேடினோம். பிள்ளையை எங்கும் காணவில்லை.
பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிலிருந்து எனது சகோதரி ராஜகுமாரி எனது செல்போன் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். என் வீட்டுச் செல்போனுடன் ஆண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் பிள்ளையைத் தேட வேண்டாம் என்றும் பிள்ளை தங்களிடம் இருப்பதாகவும் பிள்ளையைத் தேடிச் சென்றவர்கள் அனைவரையும் வீட்டுக்குத் திரும்பும்படியும் இது குறித்து பொலிஸாருக்கோ, கருணா காரியாலயத்துக்கோ முறைப்பாடு செய்தால் பிள்ளை உயிருடன் கிடைக்காது என்றும் விடயத்தை பேசித் தீர்க்க வேண்டும் என்றும் பிள்ளையின் தந்தையுடன் தாங்கள் பேசவிருப்பதாகவும் தந்தையின் தொலைபேசி இலக்கம் தனக்கு வேண்டும் என்றும் அந்த தொலைபேசி அழைப்பை எடுத்த அந்த ஆள் கூறியதாகவும் எனது சகோதரி தெரிவித்தார்.
டோஹாவில் உள்ள கணவருக்குத் தொலைபேசி மூலம் விவரத்தைக் கூறினேன். அந்த ஆள் மீண்டும் தொலைபேசியில் பேசினால் தனது தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்கும் படி கணவர் கூறினார்.
பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி அழைப்புவந்தது. கணவரின் தொலைபேசி இலக்கத்தைத் தரும்படி, அழைப்பை எடுத்தவர் என்னிடம் கேட்டார். நான் கணவனின் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டவரிடம் கொடுத்தேன். பிள்ளையைக் கடத்தி வைத்திருப்பவர்கள் மூன்று கோடி ரூபாவில் ஆரம்பித்து இறுதியில் 10 இலட்சம் ரூபா தந்தால் பிள்ளையை விடுதலை செய்வதாகவும் கூறினார்கள்.
கணவர் பல தடவைகள் தொலைபேசி மூலம் பேசினார். இரவு 8 மணிக்குமுன் 10 இலட்சம் ரூபா பணம் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். மறுநாள் காலை 10 மணிக்கு தருவதாகவும் பிள்ளைக்கு எதுவும் செய்யவேண்டாம் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.
இரவு 8 மணிக்கு முதல் பணம் தரப்படவேண்டும் என்றார்கள். நாம் மறுநாள் தருவதாகக் கூறி கடன் ஏற்பாடு செய்தோம். ஆனால் மறுநாள் மாலை 7 மணியின் பின்னர் கடத்தல்காரர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புவரவில்லை. நாம் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு நிறுத்தப்பட்டதால், தொடர்பு கொண்டு பேசிக்கொள்ள முடியவில்லை.
வியாழக்கிழமை முழுவதும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. வியாழக்கிழமை மாலை 7 மணியின் பின்னர் எனது கணவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் வர்ஷாவின் குரல்போன்ற குரல் சற்று ஒலித்ததாகவும் பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கணவர் என்னிடம் தெரிவித்தார்.
பிள்ளையைக் கடத்தியவர் தன்னை ரெஜினால்ட் என்று அழைத்ததால் அவ்வாறு தன்னை அழைப்பவர் எங்களது வீட்டுக்கு கம்பியூட்டர் திருத்த வேலைக்கு வரும் ரெஜி என்ற நபராக இருக்கலாம் என்றும் அந்நபர் குறித்து கவனம் செலுத்தும்படியும் கணவர் கூறினார்.
நாம் ரெஜினால்ட் பற்றி தகவல் திரட்டினோம். அந்த நபர் மார்ச்11 காலையிலும் கம்பியூட்டரின் ஒலிபெருக்கி சம்பந்தமாக என்னுடன் உரையாடியிருந்தார். நாம் பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கும்போது உரையாடியுள்ளார். பிள்ளை காணமற்போன விஷயத்தை அவரிடம் கூறியதும் அவர் அனுதாபம் அடைந்தவர் போல் பேசினார்.
பிள்ளை உயிருடன் கிடைக்கவேண்டும் என்றால் பொலிஸுக்கு சொல்லக்கூடாது என்று கூறப்பட்டதால் நாம் பொலிஸுக்கு முறைப்பாடு செய்யவில்லை. வேறுவழிகள் மூலம் பொலிஸார் அறிந்து வியாழன் நள்ளிரவில் பொலிஸார் வீட்டுக்கு வந்தனர்.
அடுத்தநாள் வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில் பிள்ளை ஒன்றின் சடலம் உரப்பை ஒன்றினுள் போடப்பட்ட நிலையில் வீதியோரத்தில் கிடப்பதாக எனக்குத் தகவல் வந்தது. உரப்பை ஒன்றுக்குள் போடப்பட்டிருந்த சிறுமியின் உடலை வெளியே எடுக்கப்பட்டு எனக்குக் காண்பிக்கப்பட்டது. அச்சடலம் எனது மகள் வர்ஷாவினுடையது என்று நான் அடையாளம் காட்டினேன். கைகள், கால்கள், முகம் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது’ என்று தாயார் கிருபைராணி கூறினார்.
ஆட்டோசாரதி இராமையா சித்திரவேல், தயாரின் சகோதரி இராஜகுமாரி கரோல் வாக்குமூலங்களும் மரண விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.மரண விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பல்லி
இந்த செய்தி யாரையோ காப்பாறுவதாக பல்லி நினைக்கிறது. பார்ப்போம் சடத்திடமும் உறவிடமும் இருந்து தப்புவது சுலபம். ஆனால் தேசம் தங்களை நடுசந்தியில் நிற்க்க வைக்கும். அதில் பல்லியின் பங்கும் இருக்கும். பொறுத்துதான் பார்ப்போமே.