நேட்டோ படைகளின் 12 ட்டிரக் வண்டிகள் பாகிஸ்தானில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானிலுள்ள படைகளுக்கான விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த ட்டிரக் வண்டிகள் மீதே தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆப்கான் எல்லைகளிலுள்ள வெளிநாட்டு படைகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் போதே வடமேற்கு நகரான பெசாவார் என்ற இடத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆயினும், தாக்குதலுக்கு இலக்கான 12 வாகனங்களும் எரிந்து சாம்பலாகியதாக பொலிஸார் மேலும் கூறினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தத் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, “பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழிக்க அந்த நாட்டு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” எனக் கேட்டுள்ளார். பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு சில பகுதிகளில் சீரழிந்து கிடக்கிறது. என்றாலும் இந்தத் தாக்குதலையடுத்து மேற்படி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தேடுதல் நடத்தினரென ஏ. எப். பி. செய்தி ஸ்தாபனம் அறிவித்தது.