உலக பொருளாதார நெருக்கடி பற்றி அடுத்த வாரம் லண்டனில் நடக்கவிருக்கும் 20 முக்கிய நாடுகளின் மேனிலை மாநாட்டுக்கு முன்னொடியாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று லண்டன் வீதிகளின் ஊடாக அணிவகுத்துச் சென்றார்கள்.
வறுமை, வேலைவாய்ப்புகள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவை குறித்து அவசர நடவடிக்கை வேண்டும் என்று குரல் எழுப்பிய இந்த அணிவகுப்பாளர் கூட்டணியில் பல தொழிற்சங்கங்கள் பல அறநிலையங்கள், மதசார்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்பு பிரச்சாரகர்கள், இப்படிப் பலர் இணைந்திருந்தார்கள். தாம் சொல்ல விரும்புவது சமாதானமான முறையில் போய் சேரவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனாலும், அடுத்த சில தினங்களில் நடத்தப்படவுள்ள மற்றைய ஆர்ப்பாட்டங்கள் தெருக்கலவரங்களை உருவாக்கக்கூடும் என்று கருதும் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கிறார்கள். இதேபோல பொருளாதார நெருக்கடி பற்றிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஜெர்மனியிலும் நடத்தப்படுகின்றன.