எதிர்க் கட்சித்தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 60ஆவது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு கட்சியாலும், ஆதரவாளர்களாலும் மதவழிபாட்டுத் தலங்களில் விசேட மதவழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான வழிபாடு கொழும்பு கங்காராம விகாரையில் மாலை 6 மணிக்கு இடம் பெறவிருக்கின்றது. இந்த நிகழ்வின் போது “சுதந்திரத்துக்கான மேடை’ என்ற வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவமும் இடம் பெறவுள்ளது.
அதேநேரம் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தொடர்ந்தும் கரு ஜயசூரிய நீடிப்பார் எனவும், கட்சித் தலைவரின் சில பொறுப்புக்கள் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், என்ன அதிகாரங்கள் செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி சிரேஸ்ட தலைவர் பொறுப்பை ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.