வன்னியில் மோதல்பகுதியில் அகப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் தற்போது மனிதப் பேரவலத்தை நோக்கிச் செல்வதாக கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்ததுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்தார்.
ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் “பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான யோசனைகளை’ முன்வைக்குமாறு நடத்திய மகாநாட்டில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்; இன்றுள்ள யுத்தப்பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கெரில்லா பாணியிலான பயங்கரவாதம் வெளிப்படலாம். இக் கருத்தை ஏனைய சிவில் சமூக அமைப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.
அங்குள்ள மக்கள் படும் இன்னல் குறித்து அதிர்ச்சியடைந்தேன். அதேபோல அவர்கள் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்குகின்ற முகாம்களும் திருப்தியாக இல்லையென நினைக்கிறேன். அங்கு சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும். இம்முகாம்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச அமைப்பிடம் விட்டுவிட்டால் பிரச்சினை ஏற்படாது.
இதேவேளை; முல்லைத்தீவில் சிக்கியுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் என்ன செய்யமுடியும்? சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அரசையும் புலிகளையும் ஒத்துழைக்குமாறு கோருகின்றது. புலிகள் அம்மக்களை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அரசு யுத்தத்தை முன்னெடுக்கின்றது. இதற்கு இரு தரப்புமே பொறுப்பானவர்கள். மக்களை விடுதலைசெய்யுமாறு புலிகளுக்கு என்ன அழுத்தம் வந்ததெனக் கேட்கின்றேன். சென்னை, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் சமூகத்திலிருந்து இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் மக்களை தமது கேடயமாக வைத்துள்ளனர்.
துப்பாக்கியை ஏந்திய படி புலிகள் உள்ளனர். இதனால் மக்கள் வெளியேறுவது எவ்வாறு சாத்தியம். அவர்கள் எறிகணைகள் மற்றும் பீரங்கியினால் கொல்லப்படுகின்றனர். மனித நேய அடிப்படையில் அவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும். அவர்களை அனுமதித்தால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக மனித நேய பணியை மேற்கொள்ள இடமளிக்குமாறு கோரமுடியும்.
வெளியேறுபவர்களில் ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறும் அதனை சட்ட ரீதியாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதியை நாம் கேட்கமுடியும். 1971 ஆம் ஆண்டு நடந்தது போன்று 78 ஆயிரம் பேருக்கு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பொதுமன்னிப்பளித்தார்.
இந்நிலையில் ஆயுதங்களை கைவிட்டு வந்தவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. இதேபோல பொது மன்னிப்பின் மூலம் போராளிகளும் ஏனையோரும் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொள்ள எமது அமைப்பின் மூலம் கோரலாம். எனவே அகப்பட்டு துன்பப்படும் மக்களுக்கு உதவுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். நாம் எல்லோரும் இணைந்து குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதற்காக இணைந்து நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டுமென்றார்.
ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இங்கு பேசும் போது; போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றது. கிளர்ச்சி இலங்கையில் முதல் முறையல்ல 1971,1989 ஆகிய காலப்பகுதியில் இரு தடவை நிகழ்ந்தன. 1987 முதல் 1989 வரையான காலப்பகுதி மிகப் பயங்கரமானது. தற்போது போல இது தென்னிலங்கையிலும் சமனாகக் காணப்பட்டது.
நாட்டின் எல்லா இடங்களிலும் சோதனைகள் இடம்பெற்றன. தமிழர், முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டனர். சிங்களவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதை மறந்து விடமுடியாது. அக்கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டது. நான் அப்போது கைது செய்யப்பட்டேன். புலிகள் ஆயுதம் மூலம் அழிக்கப்படுவது இலங்கை தமிழ் மக்களுக்கு நன்மையாகும். 89 இரத்தக் களரியின் பின் இராணுவம் முகாம்களில் முடக்கப்பட்டது. புரட்சியை மேற்கொண்டவர்கள் ஜனநாயகத்துக்கு வந்து கூட்டங்களை நடத்தினர், நிலைமை வழமைக்குத் திரும்பியது.
இரு சர்வாதிகாரங்கள் உள்ளதைவிட ஒன்று இருப்பது நல்லது. இரண்டு இருப்பது பயங்கரமானது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென்பதை ஏற்கின்றேன். புலிகள் தமிழ் தலைவர்களை, மக்களை கொலை செய்துள்ளனர்.சக போராட்ட இயக்கத்தையும் அழித்தனர். நாம் தர்க்க ரீதியாக சிந்திக்க வேண்டும். பாதிக்கப்படும் இதயம் ஆறுதலடையவே போர் இடம்பெறுகின்றதென்றார்.
Kusumpan
இவ்வளவு காலமும் எங்கே இருந்தீர்கள் இருந்தால் போல் வந்து கதைக்கிறீர்கள். புலிகள்தான் மற்றய இயக்கங்களை அழித்தது அழித்தது என்கிறீர்கள் மற்றய இயக்கங்கள் சும்மாவா இருந்தன. 30000 மக்கள் தான் சாவார்கள் என்றால் மீதி எங்கே? சர்வாதிகாரிகள் இருவர் இருப்பதை விட ஒருவர் இருப்பது மேல் என்றீர்கள். அப்போ சர்வாதிகாரத்தை அனுமதிக்கிறீர்கள். சரி எம்தலைவர் பிரபாகரனே சர்வாதிகாரியாக இருக்கட்டுமே
suppu
//சரி எம்தலைவர் பிரபாகரனே சர்வாதிகாரியாக இருக்கட்டும//குசும்பன்
மகிந்தா எண்டாலும் தேர்தல் வைப்பார் பிரபா தேர்தல் எண்டா என்ன? எண்டு கேப்பார்?
chandran.raja
நம்மயாளு ஒருவர் சர்வாதிகாரியாக இருந்தால்தானே நாம இங்கிருக்கலாம்.