மத்திய, வட மேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் இரு மாகாண சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர்களும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் வடமேல் மாகாண முதலமைச்சராக அதுல விஜேசிங்கவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது.
மத்திய மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட சரத் ஏக்கநாயக்க அம்மாகாண சபையின் நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனிதவலு, கல்வி கலாசாரம், உல்லாசத்துறை, போக்குவரத்து, காணி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு விநியோகம் மற்றும் முதலீட்டு இணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
வடமேல் மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அதுல விஜேசிங்க அம்மாகாணத்தின் நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனித வலு, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள், காணி, போக்குவரத்து, சூழல், சுற்றுலாத்துறை, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் விநியோகம் மற்றும் முதலீட்டு இணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
மத்திய மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம் சமூக நலன்புரி, சிறுவர் நன்னடத்தைச் சேவை அமைச்சராக எதிரிவீர வீரவர்தனவும், விவசாயம், சிறுநீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி கமநல அபிவிருத்தி, சூழல், சமுத்திர வள அமைச்சராக நிமல் பியதிஸ்ஸவும், நெடுஞ்சாலை அபிவிருத்தி, மின்வலு எரிசக்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பந்துல யாலேகமவும், கைத்தொழில் விளையாட்டுத் துறை, மகளிர் விவகாரம், கிராமிய அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாசாரம், கல்வி, இளைஞர் விவகார அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வடமேல் மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், கமநல அபிவிருத்தி அமைச்சராக கே. டபிள்யூ. சாந்த பண்டாரவும், சமூக நலன்புரி சிறுவர் நன்னடத்தை மகளிர் விவகாரம் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக நிரஞ்சன் விக்கிரமசிங்கவும், நெடுஞ்சாலை அபிவிருத்தி, மின்வலு, வீடமைப்பு நிர்மாணத்துறை கடற்றொழில் அமைச்சராக அருன்திக பெர்னாண்டோவும் சுகாதார, சுதேச மருத்துவ, விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராக அசோக வடிமங்காவவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சகல மாகாண சபை பிரதிநிதிகளும் தம்மைத் தெரிவு செய்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
