கனடாவின் ரொறண்டோ நகரில் இருந்து வெளியாகும் “தமிழர் செந்தாமரை” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கனக அரசரத்தினம் (வயது 58) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலமானார்.
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அரசரத்தினம் 1980 களில் ஆரம்பத்தில் வீரகேசரியில் ஒரு செய்தியாளராக இணைந்து தனது பத்திரிகைத்துறை வாழ்வை ஆரம்பித்தார். பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை விறுவிறுப்புடன் தருவதில் பெயரெடுத்த அரசரத்தினம் இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்தார்.
கனடாவில் அவர் வேறு தொழில் துறைகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் இருந்த போதிலும் கூட ஊடகத்துறையில் இருந்த அதீத ஈடுபாடு காரணமாக அங்கும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிப்பதிலேயே அக்கறை காட்டினார். தமிழர் செந்தாமரை என்ற வாரப்பத்திரிகையை சுமார் 15 வருடங்களாக ரொறண்டோவில் இருந்து வெளியிட்டுவரும் அரசரத்தினம் ஆண்டு விழாக்களில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து ஊடகவியலாளர்களையும் முக்கியஸ்தர்களையும் அழைத்து கௌரவிக்கத் தவறுவதில்லை. இவ்வருட விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே அவரது மரணம் சம்பவித்துள்ளது.
வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழ்ந்ததினால் தலையில் ஏற்பட்ட காயமே அரசரத்தினத்தின் மரணத்திற்கு காரணமாகியது. அவரது இறுதிக்கிரியைகள் ரொறண்டோவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.