பல்வேறு எச்சரிக்கைகளின் மத்தியிலேயே எமது அரசியல் பணிகள் தொடர்கிறது -மனோ கணேசன்

mano_ganesan_mp_.jpgஅடுத்த இரு வாரங்களில் நான் கொலைசெய்யப்படவிருப்பதாக நேற்று காலையிலிருந்து தொடர்ச்சியாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி செய்தியலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகள் தொடர்பில் பதற்றமடையவேண்டாமென ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளையடுத்து கொழும்பு, மலையகம், வடகிழக்கு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து பெருந்தொகையான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்திய தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும், கேட்டும் அறிந்துகொண்ட கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்டவர்கள் மிகவும் பதற்றமடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து சென்றிருக்கக்கூடிய ஒரு கிறிஸ்வ மதத்தலைவர் என்மீது அக்கறைகொண்டு இந்த கருத்தை இந்திய தொலைக்காட்சிகளில் தெரிவித்துள்ளார். நான் கவனமாக இருந்து நீண்ட நாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுவே அவரது நோக்கமாகும்.

நான் கொலை செய்யப்படவிருப்பதாக கடந்த மூன்று ஆண்டுகளாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் நடைபெறுவது எனக்குத் தெரியும். என்னை கொலை செய்வதற்கு மூன்று முறை நாள், இடம் குறிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அவை கைவிடப்பட்டதாக மறைந்த நண்பர் ஸ்ரீபதி சூரியாராச்சி என்னிடம் அவர் இறப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். எனவே, இத்தகைய எச்சரிக்கைகள் மத்தியில்தான் எனது அரசியல்பணி தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

இன்று எமது கட்சி மேல்மாகாணத்திலிருந்து மத்திய மாகாணத்திலும் பிரவேசித்து வெற்றிக்கொடி நாட்டிவரும் வேளையில் எம்மை அகற்றிவிடவேண்டுமென சிலர் முன்னைவிடவும் அதிகமாகவும் விரும்புகின்றார்கள்.

மனோ கணேசனை பற்றியும் எமது ஜனநாயக மக்கள் முன்னணி பற்றியும் எதிர்கால வரலாறு தீர்ப்பு கூறட்டும். இன்று நிலவும் அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து மரணிப்பதைவிட நிமிர்ந்து நின்று அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மண்ணில் விழுவதே மகத்தான மனித வாழ்க்கை என்பது எனது தந்தை கற்றுத்தந்த பாடமென்றும் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    பாராட்டலாம் அதே வேளை மக்களுக்காக பேசலாமே; இடைக்கிடை புலிபோல் தெரிகிறது. பல்லியின் பார்வை தவறா?? அல்லது மனோவின் செயல் தவறா?? கூத்தமைப்பை விட எவ்வளவோ மேல் உங்கள் செயல்பாடுகள்; பாராட்டுக்கள்.

    Reply