வட மத்திய மற்றும் மத்திய மகாகண சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் எவராயினும் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவித்தால் தேர்தலை இரத்து செய்ய நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தகள் ஆணையாளர் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வாக்களிப்பின் போது குழப்பம் விளைவிக்காமல் இருப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக இது தொடர்பாக அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் சுயேச்சைக்குழுத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார். வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்படி ஏற்பட்டாலும் மாகாண சபை தேர்தலின் முழுமையான முடிவை வெளியிடுவதிலும் தடை ஏற்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களுக்குமான தேர்தலை இதற்கு முன்னர் நடத்த உத்தேசித்திருந்த போதும் பாடசாலை விடுமுறை காரணமாக சற்று பிற்போட நேரிட்டது. கூடுதலான ஆசிரியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுகின்றமையால் அவர்களுக்கு தபால் மூல வாக்களப்புக்கு விண்ணப்பிப்பதற்காக போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக கணனி மயமாக்கப்பட்ட வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன. அதேபோன்று வாக்காளர் பட்டியலும் கணனிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திணைக்களத்துக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு ஏறபவே தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கங்களில் தவறுகள் தெண்படின் உரிய அடையாள அட்டையை சமர்பித்து வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இது வரை 25 ஆயிரம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படம் உள்ளடக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம், கடவைச் சீட்டு, தபால் திணைக்கள அடையாள அட்டை, ரயில் போக்கு வரத்து அனுமதிப் பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டை போன்றவற்றை சமர்பித்து வாக்களிப்பில் பங்குபற்ற முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.