இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மெக்சிக்கோ கொண்டுவர இருந்த பிரேரணையினை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் மெக்சிக்கோ கொண்டுவர இருந்த தீர்மானத்தை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்பினராக இணைந்துள்ள மெக்சிக்கோ கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரகசிய கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்திருந்தது. எனினும் ரஷ்யா அதனை எதிர்த்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவது தேவையற்றது எனவும் தெரிவித்திருந்ததாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, மெக்சிக்கோவின் தீர்மானம் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதனால் அது அதிக முக்கியத்துவமற்றது. இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வரப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்குமென இலங்கை வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான ஜி.எஸ்.பலிகக்கரா மெக்சிக்கோ பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை நிலை தொடர்பாக விளக்குவார். எனவே, இந்த விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வராது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வருவதை ரஷ்யா மட்டும் எதிர்க்கவில்லை. பிரித்தானியாவும் எதிர்த்து நிற்பதாக சபையின் இந்த மாதத்தின் தலைவரான யுகியோ ரகாசு தெரிவித்தார். சூடானின் டாபர் பிராந்தியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளும், இலங்கையில் தோன்றியுள்ள பிரச்சினைகளும் ஒரே மாதிரியானையல்ல என பிரித்தானியாவின் தூதுவர் ஜோன் சாவெர் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.