வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள அதே வேளை சகல தேர்தல் பிரசாரப் பணிகளும் இன்று நள்ளிரவு (11) 12.00 மணியுடன் முடிவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
18 ஆயிரம் பொலிஸார்
தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு அவர்கள் நேற்று (10) முதல் தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களுக்கும் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தவிர இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி அண்டிய மாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இவர்கள் வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் என்பவற்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் 15 ஆம் திகதி வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அரச ஊழியர்கள்
தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் 12ஆம் திகதி முதல் கடமையைப் பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் 13ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும் பாடசாலைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் கண்காணிப்பு
தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் அடங்கலான ஐந்து கண்காணிப்பு அமைப்புகள் ஈடுபடவுள்ளன. பெப்ரல் அமைப்பு 12ஆம் திகதி முதல் அப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்தார். இம்முறை 3 ஆயிரம் பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதோடு இதில் 600 பேர் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
2247 பேர் போட்டி
இம்முறை தேர்தலில் மத்திய மாகாணத்தில் இருந்து 56 பேரும், வடமேல் மாகாணத்தில் இருந்து 50 பேருமாக 106 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். 17 கட்சிகளும் 43 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட உள்ளன. 2247 பேர் களத்தில் குதித்துள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 15 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு இம்மாகாணத்தில் 17 இலட்சத்து 46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1389 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. இங்கு 16 இலட்சத்து 61 ஆயிரத்து 733 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1209 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.