மாகாண சபைத் தேர்தலை நாட்டை மீட்டெடுப்பதற்கான இரண்டாவது யுத்தம் எனக் கருதி மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனத் தென் மாகாண முதலமைச்சர் ஷான்விஜயலால் தசில்வா தெரிவித்தார். மாத்தளை சுதந்திரக் கட்சி பணிமனையில் கட்சியின் அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறுகையில்;
ஆங்கில ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து தாய் நாட்டை மீட்டெடுக்க உயிர்த்தியாகம் செய்த வீரபுரன் அப்பு, கொங்கடுவெல பண்டார போன்ற வீர புருஷர்கள் மாத்தளை மாவட்டத்திலேயே தோன்றியுள்ளனர். மாத்தளை மண்ணில் இருந்தே வெள்ளைக்காரர்களிடமிருந்து தாய் நாட்டை மீட்கும் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அந்நியரிடமிருந்து மீட்கப்பட்ட எமதுமண் இன்று பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்குண்டுள்ளது. அன்றைய வீரபுருஷர்களை போன்றே இன்று எமது முப்படையினரும் , உயிர்த்தியாகம் செய்து போராடி, எமது நாட்டை படிப்படியாக மீட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் அரசியல் சாணக்கியமும் ஆளுமை மிக்க தலைமைத்துவமுமே இதற்கான காரணம்.
நாட்டின் இறைமையையும் , ஒருமைப்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ளவேண்டுமாயின் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் .நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு இடமளிப்பார்களானால் இதுவரை கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை இழக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். ஜனாதிபதித் தேர்தலை விட இந்த மாகாணசபைத் தேர்தல்களில் பெருமளவு மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி பெற்றுள்ளார். என முதலமைச்சர் ஷான்விஜயலால் தசில்வா குறிப்பிட்டார்.