வன்னியில் தற்போது தொடர்ந்து இடம் பெற்றுவரும் கொடிய யுத்தத்தின் காரணமாக காயமடைபவர்களுக்கும் ஏனைய குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுக்கும் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கும் வைத்திய சேவைகளுக்கும் பெருந்தட்டுப்பாடு அப்பகுதியில் நிலவுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் செல்லும் மார்க்கத்திற்கும் நோயாளர்களை எடுத்துச் செல்லும் மார்க்கத்திற்கும் விடுதலைபுலிகளும் அரசாங்கமும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது. இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு இணங்க நடந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தற்போது நடைபெறும் இந்த யுத்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட சுதந்திரபுனம், வள்ளிபுரம், உடையார்கட்டு பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் காயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
வன்னியில் பல வைத்தியசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதோடு, சேவையில் இருக்கும் சில வைத்தியசாலைகளின் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள், வைத்திய சேவைகள் உட்பட பல வைத்திய செயற்பாடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவசர நிலையிலுள்ள நோயாளர்களுக்குக் கூட உடனடியாக சிகிச்சையளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் கூட போதியளவு அவ்வைத்தியசாலைகளில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. எனவே வன்னியில் அல்லல்படும் அப்பாவி மக்களுக்கு அவசிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு பொறுப்பிலுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
வன்னி அப்பாவி மக்களின் இன்னல் அறிந்து விஷேடமாக இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகம் முன்வந்து அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறில்லையாயின் வன்னியில் தற்போதுள்ள 4 இலட்சம் மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே தோற்றுவிக்கப்படும். இவர்களுள் கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுவர்கள், முதியோர் போன்றோரும் உள்ளமை கவனிக்கவேண்டியது.
வன்னி மக்களுக்குத் தேவையான தட்டுப்பாட்டிலுள்ள மருந்துப் பொருட்களை அன்பளிப்புச் செய்ய விரும்பும் தனிநபரோ, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்போ விரும்பினால் தயவு கூர்ந்து என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவர்கள் 0112507799, 0114527297 என்ற தொலைபேசி இலக்கத்தினூடோ என்னைத் தொடர்பு கொள்ளலாம்.