வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத 26 சடலங்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியவில் அரசாங்க செலவில் பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட நீதிமன்றின் உத்தரவுடன் சடலங்களை பொலிஸார் அடக்கம் செய்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வன்னிப் போர்முனைப் பகுதியில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட இவையாவும் புலிகளின் சடலங்கள் எனத் தெரிவிக்கப்பட்டு சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் கேட்டிருந்தனர். பழுதடைந்த நிலையில் இவை இருந்ததால் சவச்சாலையிலிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் சவச்சாலையில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்தும் சடலங்களை வைத்திருக்க முடியாத நிலையில் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் சடலங்களை அடக்கம் செய்தனர்.