இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில், சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை நிறுவன ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று காலை மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனுக்கு வந்த அவர், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார். பின்னர் சட்டென்று தனது கையில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ந்து போனது. உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். ‘மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், ‘பெண்னே நீ மாத இதழில் கணினி துறையில் பணியாற்றி வந்தார்.
.
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: சாகும் தருணத்தில் முத்துக்குரின் வாக்குமூலம்
”ஈழத் தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்” என்று சென்னையில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார். இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, ‘என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்’ என முத்துக்குமரன் தெரிவித்தார்.
மேலும் பேசிய முத்துக்குமரன், ”எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத் தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்றார்.
முத்துக்குமாரின் மரணத்துக்கு பிறகாவது இந்தியா போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் – வைகோ
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் முத்துக்குமரனின் மரணத்துக்கு பிறகாவது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த வைகோ, மருத்துவமனை உள்ளே சென்று முத்துக்குமரனின் கருகிப்போன சடலத்தைப் பார்த்து அழுதார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரத்தமிழன் முத்துக்குமரன் ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை போக்கியிருக்கிறார். மருத்துவர்கள் தன்னுடைய உயிரை காப்பாற்றிவிடக் கூடாது என்ற வைராக்கியமாக, லட்சியத்தோடு தீக்குளித்திருக்கிறார். கருகிப்போன முத்துக்குமரனின் கால்களைப் பிடித்து அழுதேன். ஈழத் தமிழர்களுக்காக போராடும் வரலாற்றில் முத்துக்குமரனுக்கு தனி இடம் உண்டு. வசந்தம் தேடும் வாலிப வயதில் ஈழத்தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை கொடுத்திருக்கிறார். 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் எரிமலை போல் வெடித்தார்கள்.
அதேபோலத்தான் இப்போது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக, தமிழக இளைஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த போராட்டம் பெரிய அளவில் எழுச்சித் தரும். முத்துக்குமரனின் மரணத்துக்கு பின்பாவது இந்திய அரசு இலங்கையில் நடக்கும் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியில் கைக்குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் என ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்துக்கு அஞ்சி தவிக்கின்றனர். இலங்கை அதிபர் சர்வதேச செஞ்சசிலுவை சங்கங்கள், பத்திரிகையாளர்களை அழைத்து உண்மை நிலவரம் என்ன என்பதை அறிவிக்க வேண்டும்.
முத்துக்குமரன் சாவுக்கு இந்திய அரசுதான் பொறுப்பு: திருமா
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது. சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் என்றார்.
முத்துக்குமார். கடைசியாக எழுதிய கடிதம்
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம்.
வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சகதமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா? ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் லி இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.
உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் லி அதுதான், இந்திய உளவுத்துறை லி ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே…
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலி ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்லி கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை99
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி. இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Jeyabalan T
சகோதர இனத்தின் படுகொலையைக் கண்டித்து தனது இன்னுயிரைக் கருக்கிய முத்துக்குமாரனது தன்னலமற்ற பிறர் நலன் சிந்திக்கும் எண்ணம் மகத்தானது. அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
ஆனால் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. இவ்வாறான உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் தீக்குளிப்புச் செய்ல்கள் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் மகத்தானது. இவ்வாறான அநியாய இழப்புகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் அனைவரும் கண்டிக்க வேண்டும். அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்படவும் வேண்டும். ஆனால் அதற்காக தங்களைத் தாங்களே அளிப்பது இப்பிரச்சினைக்கு தீர்வாகாது.
முத்துக்குமரன் போன்ற நல்ல உள்ளங்கள் நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கு நல்ல பல காரியங்களைச் செய்திருக்கலாம். அவர்கள் இவ்வாறு தங்களை அழித்துக் கொள்வதை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்க முடியாது.
1983க்களில் இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு கொந்தளித்து இவ்வாறான பல தீக்குளிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றது. அதனால் தமிழ் சமூகம் எவ்வித நன்மையும் அடையவில்லை. இறுதியில் தமிழர்களை இந்திய அரசு தனது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டது. முத்துக்குமரன் போன்ற நல்ல உள்ளங்களின் இந்த செயல்கள் தமிழக அரசியல் வாதிகளின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கே பயன்படும்.
//கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த வைகோ, மருத்துவமனை உள்ளே சென்று முத்துக்குமரனின் கருகிப்போன சடலத்தைப் பார்த்து அழுதார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரத்தமிழன் முத்துக்குமரன் ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை போக்கியிருக்கிறார்.//
//விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது. //
இன்று ஈழத்தமிழர்கள் அவலத்திற்கு உள்ளாகின்றனர் என்பதன் அடிப்படையில் வெறும் இனவாதம் அரசியல்வாதிகளால் கக்கப்படுகிறது. இதனால் முத்துக்குமரன் போன்ற அப்பாவி உணர்வாளர்கள் து}ண்டப்பட்டு குற்ற உணர்வுக்கு உள்ளாகி தீக்குளிப்பு என்ற விபரீத முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.
குறுகிய நோக்கங்களுடன் இவ்வாறான தீக்குளிப்புச் சம்பவங்களை ஊக்கப்படுத்துவதும் அதனை போற்றுவதும் மிகப்பெரும் தவறு. ஒரு மனித அவலத்தை கண்டிக்க இன்னொரு மனித அவலத்தை ஏற்படுத்த வேண்டாம்.
முத்துக்குமரனது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
த ஜெயபாலன்.
palli
முத்து குமரன் குடும்பத்துக்கு நாம் மட்டுமல்ல எமது ஈழ தமிழினமே அவருக்காக கண்ணீர் சிந்த்தும். எப்படியாவது புலியை அழித்துவிட்டு தாம் சிம்மாசனத்தில் இருக்க நினைக்கும் இத்தருணத்தில். எப்படியாவது தமிழரை காப்பாற்ற இந்திய அரசை வற்புறுத்த வேண்டுமென தம்மையே மாய்த்து கொண்ட முத்துகுமரன் சொல்ல எனக்கும் வார்த்தை வரவில்லை….
இதுக்கு பின்னும் கொழும்பில் இருந்து மகிந்தாதான் மகுடம் எனசொல்லும் தமிழர்(இங்கும்தான்) ……………..
முத்துகுமரன் போன்றோர் பிறப்பதே அரிது. அவர்கள் உயிரை விடுவது மாபெரும் தவறுமட்டுமல்ல தமிழர்க்கும் இழப்பே. முத்துக்குமரனது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பல்லி குடும்பம்.
பார்த்திபன்
இப்படியான முடிவுகள் வேதனையளிக்கின்றது. இழந்த இந்த உயிரால் தீர்வு வந்து விடுமா?? உயிரை விடுவதை விட உடனிருந்து ஊக்கம் தருவதே உயர்வானது. எனவே இதனை ஒவ்வொரு சகோதரர்களும் உணர்ந்து உணர்வு பூர்வமாக உதவுங்கள்.
indiani
இப்படியான சிலரின் தவறான போக்கை அரசியல்வாதிகளும் புலிகளும் தமது குறுகிய நோக்கங்களுக்காக பாவித்து விடும் கலாச்சாரமாக புதிய தமிழ் வெறிக் கலாச்சாரம் உருவாகியுள்ளது.
இன்றய தமிழரின் இந்த நிலைக்கு புலிகளும் புலிகளுக்கு பணம் சேர்த்து அனுப்பும் ஜரோப்பிய தமிழர்களும் பொறுப்பு எடுக்க வேண்டும். வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் நாம் எல்லோரும் ஈடுபடவேண்டும்.
ஜரோப்பிய கனடாவில் நடைபெற்ற பிரித்தானிய தமிழர் போரம் நடாத்திய எல்லா இடங்களிலும் பிரபாகரனின் படங்களும் புலிக் கொடியும் கொண்டு செய்யப்பட்ட போராட்டங்கள் புலிகளைக் காப்பாற்றவே இந்த போராட்டம் நடைபெறுவதை எடுத்துக் காட்டுகிறது .
எல்லோரையும் ஒன்று படுத்தும் பிரிஎப் புலி- பிரபா கொடிகளை தவிர்க்க வேண்டும்
புலி- பிரபா கொடிகளை உயர்த்துவதன் மூலம் பிரிஎப் தன்னை புலிகளின் பினாமிகளாக்கி விடக் கூடாது.
பிரபாகரன் தமிழர் போராட்டத்தை பற்றிய தான் வைத்திருக்கும் அறிவு என்பது இராணுவ வீரர்களை கொலை செய்து அதனால் இலங்கை அரசும் இராணுவமும் செய்யும் இனவாத கொலை வாதத்தினால் தான் தனத இயக்கம் தமிழர் போராட்டத்தை நடாத்த முடியும் என்பது பிரபாகரனின் போராட்ட அணுகு முறை இதைத்தான் இப்போதும் செய்கிறார். மக்களை ஒருங்கிணைவாக ஓரிடத்திற்கு எடுத்து சென்றதே (விரட்டிச்சென்றதே) இந்த நோக்கத்தில்தான்
இலங்கை அரசும் இராணுவமும் இதை மிக கவனமாக கையாண்டு கொள்வதின் மூலம் மட்டுமே தமிழர்களை வென்று கொள்ள முடியும்.
இதைவிட இலங்கை அரசு தமிழரிகளின் அரசியல்த்தீர்வு என்ன என்பதை இப்போதே உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசு தமிழர்களின் அரசியற் தீர்வில் புலிகளின் அழிவில் ஏமாற்றும் கொண்டதாயினும் இலங்கை அரசும் இந்த விடயத்தில் தோல்வி காணும் இனிமேல் நடைபெறவிருக்கும் புதிய அத்தியாயம் புதிய வழிமுறைகளில் இலங்கை அரசை எதிர்க்கும்.
முத்துக்குமரன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Mr. Cool
இது மிகவும் சோகமான முடிவு. உயிர் இருக்கும் வரை போராடலாம். ஆனால் இறந்துவிட்டால்? அதுவும் நம் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு நம் போன்ற சாதாரண மக்களின் உயிர் ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் நிஜம். இறுதிவரை போராடுவோம், இதுபோன்ற முடிவுகளை எடுக்காதீர்கள்.
santhanam
வன்னியில் மிஞ்சி இருக்கும் சிறுபான்மை இனத்தை பத்திரமாக புதைகுழியில் போட கெஞ்சி நிற்கும் ..படைகள் பத்தி எரியும் வீட்டின் பக்கத்தில் “குந்தி“ பந்தி பரிமாறும் மந்திரிகள். தாய் மொழியும் தாய் மண்ணும் தரையில் போட்டு கண்முன்னே மூடப்படுகின்றது இதை கவணத்தில் எடுக்வேண்டிய கட்டாயத்தின் கீழ் தமிழர்கள் முத்துக்குமரன் குடும்பத்தினருக்கு எனது கவலையையும் வீரவணக்கமும்.
Raikumar
முத்துக்குமார் உமக்காக பரிதாபப்படுகிறேன். வாகரை ஆற்றங்கரை பற்றியாதல் நீர் குறைந்த பட்சம் அறிந்திருக்கவில்லை.
Mr. Cool
இலங்கைத் தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் (நாளை) வெள்ளி மற்றும் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
puvanan
சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தன்னுடைய அமைப்பினர் செய்த குற்றத்தினை பொறுப்பெடுத்துக் கொண்ட டக்ளஸ் தண்டிக்கப்பட வேண்டும்.ஆனால் ராஜீவை தாமே கொன்றதாக புலிகள் எப்பவோ ஒப்புக் கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லையாம். ராஜீவும் இந்திய குடிமகன்தானே!
தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்
சிங்களவர்களுக்கு புலிகள் என்னவெல்லாம் செய்தார்கள்.
இந்திய அரசு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். அதே இந்திய அரசு தான் ஆதரவும் வழங்க வேண்டுமாம்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அவசரப்பட்டு விட்டார் முத்துக்குமார்.
இந்திய அரசு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். அதே இந்திய அரசு தான் ஆதரவும் வழங்க வேண்டுமாம்.
அருட்செல்வன்
இந்திய அரசு ஈழத் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதை தடுக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
kamal
/ கருகிப்போன முத்துக்குமரனின் கால்களைப் பிடித்து அழுதேன்./வைகோ
நீர் எப்பிடி அழுதீர் எண்டு மற்றவர்கள் சொல்லாமல் நீரே விமர்சிப்பது ரொம்ப ஓவர்.
Norman
இந்த அப்பாவி இளைஞனின் சோகமுடிவைச் சொல்லி புலிகளும் தமிழக அரசியல்வாதிகளும் வியாபாரம் நடத்தப் போகிறார்கள்.
புரியாதவன்
இருபத்தைந்து வருட வரலாற்றை நிதானமாக அணுகினோமென்றால், நாம், “பனங்காட்டு நரிகளிடம் சல சலப்பை” ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம், அடுக்கி வைக்கப்பட்டுள்ள சீட்டுக்கட்டு வரிசையாக விழுவதன் ஒரு பகுதிதான் இது. முதல் சீட்டை தட்டி விட்டது யார்?- இது என்னுடைய தாழ்மையான கருத்து.
chandran.raja
உயிர் மகத்தானது இயற்கையின் கொடை. உயிரை பாதுகாப்பகற்கும் மேன்மைப் படுத்துவற்காகவுமே போராடுகிறேமே! ஒழிய உயிரை மாய்த்துக் கொள்வதற்காக அல்ல. இப்படியான சம்பவங்களை போராட்டமாகவே வெற்றியாகவோ கருதுகிறவர்கள் கேலிக்குரியபவர்கள்.
அறியாமையும் அரசியல் மலட்டுத்தனமும் சுயநலபோக்குகள் உள்ளவர்கள்களே இப்படியான அரசியல் விபத்துக்களுக்கு காரணமாக பின்புலத்தில் இருந்து செயல்படுவதை காணலாம்.
தன்உயிரை மாய்த்துகொள்ளும் உரிமை யாருக்கும் இல்லை. தண்டணைக்குரிய குற்றமாகும். அதே போல் இப்படி தூண்டிவிடுபவர்களையும் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டுபிடித்து கடுமையான தண்டணை வழங்கவேண்டும். இனிஒருமுறை இதுபோன்று நடவாது இருப்பதற்காக.
தமிழகஅரசு உடனடியாக கவனத்தில்லெடுத்து நடவடிக்கை எடுக்குமா?
accu
முத்துக்குமரன் என்ற இந்த அப்பாவியின் மரணத்தை வாதிக்க என் மனம் ஒப்பவில்லை. ஆனால் இந்தத் தற்கொலையின் பின்னணியில் மிகக் கொடூரமான கொடியவரின் கைவண்ணம் உள்ளதென்பது நிச்சயம்.
அருட்செல்வன்
ஈழத்தமிழருக்காக நேற்று சென்னையில் தீக்குளித்து இன்னுயிரைத் தியாகம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்துக்குமார் அவர்களது இறுதிச்சடங்கு இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது. அங்கு செய்தியாளர்களிடம் முத்துக்குமாரின் தந்தை தனது மகனின் மரணம் குறித்து தெரிவிக்கையில்,
என் மகன் இறந்ததை நினைத்தால் மனசுக்கு வருத்தமாயிருக்கு (அழுகிறார்). ஆனால் அவன் நாட்டுக்காக, நமது தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழருக்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்று நினைக்கிறபோது ரொம்ப பெருமையாயிருக்கு (கண்ணீரை துடைத்துக் கொள்கிறார்) என்று தெரிவித்தார்.
Mr. Cool
சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை தாக்க முயன்ற தமிழநாடு சேலம் மாவட்ட அமைப்பாளர் பார்த்தீபன் தலைமையிலான சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் இன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அருட்செல்வன்
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு. அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.
எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருட்செல்வன்
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பாக, நேற்று வியாழக்கிழமை காலை, பத்திரிகையாளரான முத்துக்குமார் அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு வரவேண்டும், தமிழ் மக்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் போன்ற 11 அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து, தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்தார். இந்த சம்பவத்தை அடுத்து, நூற்றுக் கணக்கான பிரஞ்சுத் தமிழ் மக்கள் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பாரிஸ் நகரத்திலுள்ள லாச்சப்பல் பகுதியில் ஒன்று கூடி, ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி. முத்துக்குமார் அவர்களை நினைந்து, அவரது உயிர்த் தியாகத்திற்கு தலை சாய்த்து அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.
இதே நேரம் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள, உலக அதிசயங்களுள் ஒன்றான ஈகிள் கோபுர முன்றலில் உண்ணாநோன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசும், இராணுவமும் முனைப்புக் காட்டி நிற்கிறது. இந்த சம்பவங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலேயே, உலக அதிசயம் முன்பாக உண்ணா நோன்பு நடவடிக்கை ஓர் ஈழத்தமிழ் உணர்வாளரால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
பாலமுருகன்
கரும் புலி முத்துக்குமரன் விடுதலைப் புலிகளின் உளவுப் படை தமிழ் நாட்டுப்பிரிவினரால் புலிகள் இயக்கத்திற்காக சேர்க்கப்பட்டவர் இவரைப்போல பல தமிழ் நாட்டு இளைஞர்கள் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர் இவர்கள் புலிகள் இயக்கத்தின் உண்மையான அக நிலைமைகளை புரியாது அவர்களைப் பற்றிய தவறான எண்ணத்தில் இன்றும் மிதந்து கொண்டே இருக்கிறார்கள் . தற்போது புலிகள் தமிழ் நாட்டிலுள்ள இப்படியான புலிகளின் உறுப்பினர்களை முத்துக்குமரன் போன்றோர்களின் தீக்குளிப்பினால் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப திட்டம் போட்டுள்ளனர்.
இவர்களின் இப்படியான கேவலமான திட்டங்களுக்கு சிறுத்தைகளின் தலைவர் திருமாமளவனும் நெடுமாறன் வை கோ போன்றவர்கள் தமது புலிகளின் கொடுப்பனவுகளுக்காக இப்படியான வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
தமது மக்களின் போராட்டத்தை தமிழ் நாட்டு மக்கள் நடத்த திட்டம் போட்டுள்ளது என்று லண்டனில் இருந்து இமெயில் மூலம் ……… எனபவரால் பல இமெயில்கள் உலகெங்கும் அனுப்பப்பட்டிருந்தன இது இலங்கைத் தமிழர்களையும் தமிழ் நாட்டுத்தமிழர்களையும் ஒன்றாக இணைத்து ஒன்று சேர்ந்து போராட்டம் நடாத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டடிருந்தது.
இந்த முத்துக்குமரனின் மரணசாசனத்தில் உள்ளஉள்ளடக்க்ததை ஆராய்ந்த பார்த்தால் புரிகிறது இவர் எவ்வளவு தூரம் புலிகளின் தொடர்பு உடையவர் என்பதும் புலிகளுடன் நேரடியாக தொடர்புடைய கரும் புலி என்பது.
தமிழ் நாட்டில் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக போராடுவது நியாய பூர்வமானதே ஆனால் தமிழ் நாட்டுத்தமிழன் முட்டாளாக்கி அவர்களை கோழைத்தனமாக பாவிப்பது கண்டிக்கப்பட வேண்டியதே.
இந்த முத்துக்குமரனக்கு உடனடியாகவே மாவீர் பட்டமளித்து கெளரவித்த புலிகளின் இணையத்தளங்கள் எதை எமக்கு எடுத்துக்காட்டுகிறது.
வன்னியில் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தப்பியோடி காடுகளில் தஞ்சமடைந்ததும் சிலர் இராணுவத்திடம் தஞ்சம் அடைந்ததும் இப்படி தஞ்சம் அடைந்தவர்களுக்கும் புலிகளுக்கும் நடைபெறும் உள்ளக போர் பற்றி இந்த தமிழ் நாட்டுப் புலிகளக்கு தெரியவரும் போது இவர்கள் தமது புலி அடையாளத்தை கைவிட்டு விடுவரார்கள் என்றே நம்புகிறேன்.
தமத சொந்த குடும்ப உறுப்பினர்களை புலிகளின் இயக்கத்pல் சேர்த்து போராட அனுமதிப்பதே இந்த தமிழ் நாட்டு புலித்தலைவர்கள் முன்மாதிரியாக செய்ய வேண்டியது அதைவிட்டுவிட்டு அப்பாவிகளை உயிரை மாய்த்து விடும்படி கேட்பது இவர்கள் எப்படியான கொடூரமானவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
கலைஞர் கருணாநிதி அவர்களும் தமிழ் நாட்டு பொலீசாரும் இப்படியான நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமால் பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படியான நிகழ்வுகள் இந்தியர்கள் பற்றியும் தமிழ் நாட்டவர்கள் பற்றியும் குறைந்த மதிப்பீட்டை உலகிற்கு கொடுத்துவிடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்
-நன்றி பாலமுருகன் தமிழ்நாடு.
senthil v k
உங்கள் பேர் உள்ளத்தின் தமிழ் ஈழ தாயக தாகம் உண்மையில் மலரும்..அமையும்.. ஒப்பிலா அர்ப்பணிப்பு.. இனி எவருமே இப்படி செய்துவிடாதீர்கள்.. நம் உறுதியான வாழ்வே மெய்யான போர்.. வீரவணக்கம் நண்பா..
padamman
தமிழருக்காக உயிரைக்கொடுப்பேன் என்று சொன்ன பிரபாகரன் இன்று பங்கரில் இருக்கும்போது ஈழத்தமிழர்ரைபோல் எந்த பாதிப்பும் இல்லாத தமிழ்நாட்டு தமிழர் தற்கொலை செய்து தனது உனர்வை வெளியிட்டுள்ளார் ஆனால் பிரபாகரன்?