மொன றாகல, புத்தள மாளிகாவில பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதபாணிகளின் தாக்குதலில் மூன்று கிராமவாசிகள் கொல்லப்பட்டதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். காணாமல் போன மூவர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மாளிகாவில சத்தாதிஸ்ஸ பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஞாயிறு மாலை அந்தப் பகுதியில் தங்கள் கால்நடைகளைத் தேடிச் சென்ற 12 கிராமவாசிகளே ஆயுதபாணிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களைச் சுற்றிவளைத்த ஆயுதபாணிகள் இவர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அதில் இருவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களுடன் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், பின்னர் நால்வர் கண்டுபிடிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் புத்தள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மொனராகல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இதிலொருவர் அங்கு மரணமானார்.
ஆயுதபாணிகளின் தாக்குதலிருந்து தப்பிச்சென்ற மூவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸாரும் ஊர்காவல் படையினரும் அப் பகுதிக்கு வந்து தேடுதல் நடத்திய போதே படுகாயமடைந்த நால்வரும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கால்நடைகளைத் தேடிச்சென்ற போது தாக்குதல்களுக் கிலக்கான இவர்களுடன் சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நால்வரையும் ஆயுதபாணிகள் தங்களுடன் கொண்டு சென்றிருக்கலாமெனவும் கூறப்பட்டது. எனினும் இந்த மூவரும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து மாளிகாவில பகுதியில் பாரியதேடுதலை நடத்தி வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.