மேல் மாகாண தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை அணிதல் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறுவோரின் வீதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று போக்குவரத்து அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் நேற்று விடுத்துள்ள இவ்வுத்தரவினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவதுடன் இதற்குப் பூரண ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகத் தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.
இத் தீர்மானம் தொடர்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தினகரனுக்குத் தெரிவிக்கையில்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது காலத்தின் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது முழுமையாக நடை முறைப்படுத்தப்படுமானால் தனியார் பஸ் உரிமையாளர்க ளுக்கே பெரும் நன்மைகள் கிட்டும். பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கு இ. போ. ச. டிக்கட் பரிசோதகர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இ. போ. ச. விற்கு வேண்டுகோளொன்றை விடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை விரைவாக நடைமுறைப்படுத்த உதவியாக சகல பஸ் நடத்துநர்கள், சாரதிகளுக்குச் சீருடைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.
பிரயாணச் சீட்டுக்களை முறையாக வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களே அதற்கான டிக்கட் மெஷின்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென சங்கம் அவர்களைக் கோருவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.