கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளும் வயோதிபர் ஒருவரும் கொல்லப்பட்டதுடன், 7 சிறுவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது நேற்றுக்காலை பத்து மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் படுகாயமடைந்தனர். இவை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுக் காலை முதல் விசுவமடு பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்றது. விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு அருகில் பொதுமக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன.
இதனால், பல வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன. இதில் ஒரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் அங்கிருந்த மூன்று சகோதரிகளும் மற்றொரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் வயோதிபர் ஒருவரும் அந்த இடங்களிலேயே கொல்லப்பட்டனர். வேறு வேறு வீடுகளில் வீழ்ந்து வெடித்த ஷெல்களினால் ஏழு சிறுவர்கள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட மூன்று சகோதரிகளதும் தாயாரும் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் சகோதரிகளான மயூரி (வயது 19), சுஜிதா (வயது 14), சுஜீவனா (வயது 16) ஆகியோரும் வயோதிபர் ஒருவரும் (பெயர் கிடைக்கவில்லை) கொல்லப்பட்டனர்.