தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அரசதரப்பிற்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட மக்கள் தங்களிடம் கோரியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ( நயவஞ்சக அரசியலின் நாயகர்கள்! : யூட் ரட்ணசிங்கம். )
அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பா.அரியநேத்திரன், எஸ்.சிறீதரன், பொன். செல்வராசா ஆகியோர் கல்முனை பிரதேச மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போது அவர்கள் இவ்வாறு தங்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான பியசேன தனது சுயநலத்திற்காக அரசுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அம்மக்கள் தங்களிடம் தெரிவித்தாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.