கொழும்பு, பகுதிகளிலுள்ள தனியார் வங்கியொன்றில் டெலர் இயந்திரங்களுக்கு வைப்பு செய்வதற்காகக் கொண்டுசென்ற ஏழு கோடி ரூபா ஆயுதமுனையில் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நெஷனல் லொஜிஸ்டிக் செலிவிஷன் லங்கா தனியார் நிறுவனத்தினர் ஏழுகோடி ரூபாவை வாகனமொன்றில் எடுத்துச் செல்கையிலேயே இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உத்தியோத்தர்களின் துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30க்கும் 1.30க்கும் இடையே நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பேலியாகொடை பொலிஸ் பிரிவிலுள்ள அலுவாகேல்ல, தெகலபொத்த பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லை. கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல தனியார் வங்கியொன்றின் டெலர் இயந்திரத்திற்கு பணத்தை வைப்புச் செய்யும் மேற்படி நிறுவனத்தின் வாகனத்தில் ஏழு கோடி ரூபாவையும் ஏற்றிக் கொண்டுவரும் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் துப்பாக்கி முனையில் இந்த கொள்ளையை நடத்தியதாக பேலியா கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அச்சுறுத்திய கொள்ளையர்கள் வாகனத்தினுள் பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த பண நோட்டுக் கட்டுகளை பொதிகளில் அடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு ள்ளதுடன், பேலியாகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவும், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இதேவேளை குறித்த தனியார் வங்கி நாட்டிலுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. கொள்ளையிடப்பட்ட பணத்தை வைப்பிலிட வரும் நபர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும், இவ்வாறு சந்தேகத்துக்கிடமான முறையில் எவரேனும் தென்பட்டால் உடனடியாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுக்கு மாறும் கேட்டுக்கொண்டுள்ளது.