சர்வதேச பொலிஸ் எனக்கூறி பணம், நகைகள் கொள்ளை

டுபாயிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவரிடம் சர்வதேச பொலிஸார் எனக் கூறி, 5 இலட்சம் ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்ட ஆறு பேரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நீண்டகாலமாக டுபாயில் தொழில் புரிந்த பின் நாடு திரும்பிய சிலாபம் கொஸ்வத்த பொத்துவடவன பகுதியிலுள்ள மேற்படி பெண் வீட்டிலிருந்த சமயம் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளை நிற டிபெண்டர் வாகனமொன்றில் வந்த சந்தேக நபர்கள் வீட்டை முற்றுகை யிட்டதுடன் வெளிநாட்டில் தங்க நகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறி மேற்படி பெண்ணை தீவிரமாக விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

வீட்டை சோதனையிடுவதாக கூறி, வீட்டிலிருந்த சுமார் ஒரு இலட்சத்து 2000 ரூபாவையும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மறுநாள் கொழும்புக்கு வருமாறும் கூறிச் சென்றுள்ளனர். கொழும்பில் தாம் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு சந்தேக நபர்கள் தெரிவித்தமைக்கு இணங்க மேற்படி பெண் வந்துள்ளார்.

அங்கும் வெளிநாட்டில் தங்க நகை மோசடி தொடர்பாக தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் பெண்ணின் வைப்புக் கணக்கிலிருந்து 4 இலட்சத்து 75,000 ரூபாவினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பெண்ணின் வீட்டுக்கு வந்த டிபெண்டர் ஜீப் வண்டியுடன் நபர் ஒருவர் பொரளையில் கைதாகியுள்ளார். இவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடுவெல, தெமட்டகொட, கொச்சிகடை போன்ற பகுதிகளிலிருந்து ஏனைய சந்தேக நபர்கள் 5 பேரும் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து 5 லட்சத்து 81,000 ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் 6 பேர் நேற்று மாரவில மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *