நன்கு சிந்தித்தே அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

pr-ranil.jpgதனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது. நாட்டைப் பற்றி நன்றாக சிந்தித்துத் தெளிவான நோக்கத்தின் பேரிலேயே அதனை ஏற்படுத்துவதே அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரநிதிகளுக்கும் இடையே நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கூறியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அச்சந்திப்பில் மேலும் கூறியதாவது:- தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை விட நாட்டுத் தலைவர் பதவி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும், பாராளுமன்றத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படும், பாராளுமன்றத்துடன் சேர்ந்து இயங்கக் கூடிய பதவியாக மாற்றப்பட வேண்டும் என்பதே 40 வருடங்காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் தனது நம்பிக்கையாக உள்ளது என்று ஜனாதிபதி இங்கு மேலும் கூறினார்.

சர்வகட்சிக் குழுவுக்கு ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி முன்வைத்த ஆலோசனையான பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் அரசிலமைப்பு திருத்தங்கள் மூலம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் இங்கு இணக்கம் தெரிவித்தனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் இங்கு கேட்டுக்கொண்ட நிலையில் அவர்களுக்கு அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்ஷ அகியோர் விளக்கமளித்தனர்.  அத்துடன் 17ஆவது திருத்த சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரினதும் அவதானம் செலுத்தப் பட்டது.

அவ்வாறு வலுப்படுத்தவும் அந்த நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அமைச்சரவைக்கு பொறுப்புக் கூற வேண்டுமென்றும் இங்கு இணங்கப்பட்டது. அத்துடன் எந்த அரசாங்கத்தின் கீழும் நிலையான ஆட்சி இடம்பெற வேண்டும் என இரு தரப்பினரும் இங்கு கொள்கை யளவில் இணக்கப்பாட்டுக்கு வந்ததுடன் எதிர்காலத்தில் இடம்பெறும் அரசியல மைப்பு திருத்தத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் குழுவின் மூலம் இணங்கப்பட்ட மேற்படி விடயங்களை செயற்படுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய, காமினி ஜயவிக்கிரம பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோஸப் மைக்கல் பெரேரா ஆகியோரும் பொதுஜன ஐக்கிய முன்னணி அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், ஜீ. எல். பீரிஸ், தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, டலஸ் அலகப்பெரும ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

pr-ranil.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *