மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 11,590 உயர் கல்வி மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் 29வது வருட நிகழ்வு நேற்று முன்தினம் பிரதமர் டி. எம். ஜயரட்னவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் எஸ். பி. திசாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற 24 மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
மஹாபொல புலமைப்பரிசிலாக மாதாந்தம் 2,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. 422 பேருக்குப் புலமைப்பரிசிலை வழங்கி 1981ம் ஆண்டு அன்றைய உயர் கல்வி அமைச்சர் அதுலத்முதலி இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். அதனையடுத்து இவ்வருடம் வரை 1,60,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.