தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பதிவு செய்யப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் திணைக்களத்திடம் சகல ஆவணங்களுடனும் கையளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவராக ஆர். சம்பந்தனும் அதன் இணைச் செயலாளராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக் கட்சிசார்பில் மாவை சேனாதிராஜாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமசந்திரனும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் தற்போது நாட்டிலில்லாததாலும் அவர் செப்டெம்பர் மாதமே நாடு திரும்பவுள்ளதாலும் அவர் நாடு திரும்பிய பின்னரே இது தொடர்பான விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமெனவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.புதிய கட்சிகளைப் பதிவுசெய்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நாள் நேற்றைய தினமென்பதும் குறிப்பிடத்தக்கது.