ரிபிசியின் 10 ஆண்டுகள்: வீ இராமராஜ்

Ramraj_V_TBCஅன்பான ரிபிசி நேயர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

நமது வானொலி பத்தாண்டுகளைக் கடந்து பதினோராவது ஆண்டில்காலடி எடுத்து வைக்கும் இந்த நாளில் வானலையில் உங்கள் அனைவரோடும்இ ரிபிசியின் நிர்வாகத்தினரின் சார்பில் உரையாடக் கிடைத்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஆண்டுகள் பத்து கடந்துவிட்டன என்பதை நம்ப முடியாத அளவுக்கு காலம் விரைவாக ஓடிவிட்டது. அனைத்து கருத்துக்களுக்குமான தளம், நடுநிலை தவறாமை, தமிழ் மக்களின் அபிலாஷை ஆகிய நோக்கங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கருக்கொண்ட எமது வானொலி, குழந்தையாகத் தவழ்ந்து இன்று எழுந்து நடைபோடத் தொடங்கிவிட்டது.

தான் தவழ்ந்த காலங்களிலேயே தன் முன்னால் இருந்த தடைகள், பள்ளங்கள் ஆகியவற்றை நேயர்களாகிய உங்களது கரம் பற்றி கடந்து வந்த இந்த  வானொலிக் குழந்தை, பெருந்தடைகள் பல கடந்த நிலையில் இனி கைவீசி வீறு நடை போட்டு முன்னேறும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

தமிழரின் அபிலாஷைகளுக்கான போரட்ட காலங்களில், அவற்றுக்கு சமாந்தரமாக நியாயமான விமர்சனங்களுடன் எமது வானொலி நடை போட்டதை எள்ளி நகையாடியவர்கள் இன்று தலைகுனிந்து நிற்கிறார்கள்.

தவறாக எடை போட்டவர்கள், ரிபிசி சொன்ன கருத்துக்கள் பலித்துப் போனதைப் பார்த்து விக்கித்து நிற்கிறார்கள். காழ்ப்புணர்வு கொண்டு காறி உமிழ்ந்தவர்கள் இன்று ரிபிசி காலங்கடந்து நிற்பதைப் பார்த்து திகைத்து நிற்கிறார்கள்.

தமிழர் போராட்டப் பாதையில் தமிழ் மக்களிடையிலான ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து ரிபிசி வலியுறுத்தி வந்த கருத்துக்கள் பத்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே உண்மையாகிப் போயிருக்கின்றன.

ரிபிசி முன்வைத்த அரசியல் விமர்சனங்களைப் புறந்தள்ளி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளமையும், தமிழரின் உரிமைக்கான ஒட்டுமொத்தப் போராட்டம் இக்கட்டு நிலையை அடைந்துள்ளதும் இன்று அனைவரும் அறிந்த ஒரு நிகழ்வு.

தமது முப்பது வருட போரட்டத்தை ஒரு மறு பரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் இன்று உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் நிற்கிறார்கள்.

இதற்காக பல்வேறு தரப்பினராலும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அனைத்துக்கும் முன்பு போலவே நியாயமான விமர்சனங்களுடன் கூடிய தனது ஆதரவை ரிபிசி தாராளமாக வழங்கும் என்பதையும் இன்றைய தினத்தில் உங்களுக்கு கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகின் எக்கோடியில் வாழ்ந்தாலும் தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் அரசியல், மத வேறுபாடின்றி ரிபிசி தனது குரலை உயர்த்தி ஒலிக்கும். இதுவரை காலமும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடந்த நாம் அடுத்தவரின் கருத்துக்களை மதித்து, வேறுபாடுகளுக்குள் உடன்பாடு கண்டு தொடர்ந்து இணைந்து போராட வேண்டிய அவசியத்தை ரிபிசி அன்று முதல் வலியுறுத்தியே வந்துள்ளது. அதற்கான தேவையும் எமது தமிழ் சமூகத்தில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு இன்று பலமாக எழுந்துள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். ரிபிசியின் கலையக மற்றும் நிர்வாக நிகழ்வுகள் கூட இந்த கொள்கைகளுக்கு ஏதுவாக ரிபிசி தொடர்ந்து நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளதையும் நேயர்கள் அவதானிக்க முடியும்.

இன்றைய இந்த 10வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு கூட அதற்கு ஒரு உதாரணமாகும். கொள்கைகளால், சூழ்நிலைகளால் பிரிந்த ரிபிசியின் ஸ்தாபகர்கள், கலையக உறவுகள் எல்லாரையும் மீண்டும் அழைத்து, அணைத்துச் செல்லும் போக்கையும் ரிபிசி மிகுந்த பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் கடைப்பிடிக்க முனைகிறது. அதற்கு ஆதரவு தந்த எமது முன்னாள் நிர்வாகிகள், கலையக உறவுகள் மற்றும் வானலை உறவுகள் ஆகியோருக்கு எனது தாழ்மையான நன்றிகள் உரித்தாகுக.

எமது சிரம காலங்களில் எங்களுக்கு உறுதுணையாக நின்று, பல்வேறு காரணங்களுக்காக இன்று எம்மைப் பிரிந்திருக்கும் எமது உண்மையான உறவுகளுக்கும் நாம் எமது அன்பு அழைப்பை விடுக்கின்றோம். உங்களின் வரவை ரிபிசி மிகுந்த வாஞ்சையுடன் எதிர்பார்க்கிறது.
ரிபிசிக்கான உங்கள் பங்களிப்புக்கள், அதுவும் நாம் மிகுந்த சிரமங்களை, சிக்கல்களை எதிர்கொண்டிருந்த வேளையில் நீங்கள் வழங்கிய உதவிகள் என்றும் எம்மால் மறக்க, மறுக்க முடியாதவை.

அதேவேளை அரசியல் காரணங்களுக்காக எங்களில் இருந்து இதுவரை காலமும் விலகி இருந்து வந்த புதியவர்களையும் வானலை உறவுகளாக ஏற்க நாங்கள் மிகுந்த ஆர்வத்துடனேயே இருக்கின்றோம். உங்கள் வரவு நிச்சயமாக ரிபிசியின் முற்றத்தில் புதிய மல்லிகையாக மணக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

ஆயிரம் பூக்களின் மணம் வீசும் ஒரு தோட்டமாக, ஆயிரம் கருத்துக்கள் கலக்கும் ஒரு களமாகவே என்றும் ரிபிசி இருக்க விளைகிறது. அதற்காக இதுவரை விலகி இருந்த புதிய நேயர்களுக்கும் அது அன்பு அழைப்பு விடுகிறது.

அரசியல் ரீதியான கைவிலங்குகள் நீங்கியதால் சில அரசியல் கட்சிகள் கடந்த காலங்களைப் போலல்லாது எங்களுடன் வானலையில் இணைந்ததை நேயர்கள் அவதானித்திருப்பிர்கள். அதே போன்று வானலை உறவுகளுக்கும் எமது கதவுகள் என்றும் திறந்திருக்கின்றன.

எமது அரசியல் ஆய்வாளரான விஸ்வலிங்கம் சிவலிங்கம் அவர்களும், ஜேர்மனியில் இருந்து எமக்கு உரிய பங்களிப்புக்களை வழங்கிவரும் செல்வதுரை ஜெகனாதனும் மற்றும் அரசியல் அவதானி தம்பாவும் அன்று முதல் இன்று வரை எம்முடன் இணை பிரியாது செயற்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ரிபிசியின் நிர்வாகம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது.

எனது மனைவியான சிவாஜினி ராம்ராஜ் அவர்களின் ரிபிசிக்கான சில பங்களிப்புகளையும் நாம் இந்த இடத்தில் மறந்துவிட முடியாது. அனைத்து வேளைகளிலும் ரிபிசியை தனது ஒரு குழந்தை போலவே அவர் பராமரித்து வந்துள்ளார். ஒலிபரப்பாளராக, நிர்வாகியாக அவர் செய்த கடமைகள் மறுக்க முடியாதவை. ஒரு கணவன் என்ற வகையில் அவருக்கு நான் நன்றி கூறமுடியாது. ஆயினும் ரிபிசி நிர்வாகத்தின் சார்பில் எமது நன்றியை அவருக்கும் எனது குழந்தைகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது கலையகத்தை மெருகூட்டி புதிய தெழில்நுட்பத்துக்கு கொண்டு வருவதற்கு நம்பிக்கையுடன் நிதியுதவி செய்த கனவான்களுக்கும் அதேவேளை இக்கலையகத்தை வடிவமைப்பதற்காக இரவுபகல் பாராது அயராது உழைத்த எனது நண்பன் கோபிநாத் மற்றும் எனது மைத்துனர் நீல் ராஜரட்ணத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எமக்கு தமது ஒத்தாசைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். பல நேயர்கள் எமக்காக வெளியில் இருந்தே எமது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள். அரசியல் ரீதியான நெருக்கடிகள் காரணமாக, போதிய தயாரிப்பாளர்கள் இன்றி நாம் தவித்த போது, இந்த நேயர்களின் இந்த பங்களிப்பு ரிபிசி வானலையில் நீடித்திருக்க எமக்கு பெரும் உதவியாக இருந்தது. அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

எமது இணையத்தளத்தை முழுமையாக வடிவமைத்து ஒத்துழைப்பு வழங்குகின்ற செல்வநாயகம் கணேசலிங்கத்திற்கும் நன்றிகள். ரிபிசிக்காக புதிய குறு இசைப் பாடலை எழுதிய லோகநாதன் ஆசிரியருக்கும் நன்றி.

அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், ஒரு ஊடகம் நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக எனது நண்பர்கள் பலர் ரிபிசிக்கு தொடர்ந்து கைகொடுத்து வந்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

பல வகைகளில் விளம்பரங்களைத் தந்து வந்த உறவுகளுக்கும் எமது நன்றிகள். இறுதியாக எமது உயிர் நாடியான நேயர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு நடுநிலையான ஊடகம் என்ற வகையில் ரிபிசி தனது பொறுப்புக்களை உணர்ந்தே இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளது. இனிவரும் காலங்களிலும், தமிழர் அரசியலின் இன்றைய நிலை உணர்ந்து, அனைவரையும் அணைத்துச் செல்லும் போக்கை அது கடைப்பிடிக்கும் என்பதை இங்கு உறுதியாகச் சொல்கிறேன்.

நியாமான விமர்சனங்களுடன், நடுநிலை தவறாது அதன் பணி என்றும் சிறக்கும். அதேவேளை ரிபிசியும் அதனது செயற்பாடு குறித்து உங்கள்  விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறது. அத்தகைய விமர்சனங்களே எம்மை வழி நடத்தும் என்பதையும் நாம் நம்புகிறோம். அதுவே என்றும் உங்களுடன் எம்மை பிணைத்தும் வைத்திருக்கும்.
 
பாசமுடன்  வீ இராமராஜ்
நிர்வாக பணிப்பாளர்
ரிபிசி வானொலி

ரிபிசியின் 10 ஆண்டுகள்: ரிபிசி வானொலி அறிக்கை

TBC_Logoசர்வதேச ரீதீயாக ஒலிபரப்பாகிவரும் தமிழ் வானொலிகள் மாற்றுக் கருத்துக்கான முதன்மை வானொலியாக 10 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் ரிபிசி தனது சேவையை ஆற்றியுள்ளது.  என 10வது நிறைவு ஆண்டையொட்டி விடுத்திருக்கும் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.
 
ரிபிசி வானொலி இன்று 11வது ஆண்டில் காலடிவைக்கின்றது இதனை ஒட்டிய விசேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் சனி ஞாயிறு இரு தினங்களில் ரிபிசியின் கலையகத்தில் நடைபெற உள்ளது. அத்தோடு புதிய கலையகமும் திறந்து வைக்கப்பட உள்ளது.
 
1999ம் ஆண்டு  ஜுன் மாதம் 16ம் திகதி பணிப்பாளர் வீ.இராமராஜ் தலைமையில் எஸ்.பி ஜெயக்குமாருடன் இணைந்து இவ் வானொலி ஆரம்பிக்கபட்டது. இவ் வானொலியின் நிகழ்ச்சியினை இலங்கையின் புகழ் பூத்த வானொலி அறிவிப்பாளர் திருமதி மயில்வாகனம் மும்மத பாடல்களை ஒலிபரப்பி ஆரம்பித்து வைத்தார்.

இவ்வானொலி சிற்றலை அலைவரிசை ஊடாக மூன்று வருடங்களாக தாயகத்திற்கான ஊரோடு உறவாட ஒரு மணிநேர நிகழ்ச்சியை ஒலிபரப்பி நடாத்தியது. பின்னர் அதனை பொருளதார நெருக்கடி மற்றும் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இடைநிறுத்தி கொண்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து  ஒலிபரப்பாகும் சூரியன் எப் எம் அவுஸ்திரிலியாவில் இருந்து  ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி கனடாவில் இருந்து  ஒலிபரப்பாகும் சி.டி.ஆர் வானொலி ஆகியவற்றுடன் இணைந்து ரிபிசி வானொலி ஒரே நேரத்தில் அணைத்து நாடுகளிலும் உள்ள நேயர்களை ஒன்றினைத்து வாரந்தம் இரண்டு மணிநேர சேவையினை ஒலிபரப்பிய போதிலும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக அச்சேவைகளும் இடைநிறுத்தபட்டன.
 
ரிபிசி வானொலி இலங்கை ஒலிபரப்பு கூட்டத்தாபனத்துடன் இணைந்து ஊரோடு உறவாட நிகழ்ச்சினை தினம் தோரும் ஒருமணிநேரம் நடாத்தியது. விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துவுணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து நோர்வேயுடான வன்னியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மறைந்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனால் ரிபிசி வானொலியின் ஒலிபரப்பினை நிறுத்தும்படி அழுத்தம் கொடுக்கப்பட்ட அதேவேளை இலங்கையில் உள்ள தமிழ் அமைச்சர் ஒருவரினாலும்  ரிபிசி வானொலியின் நிகழ்ச்சியினை நிறுத்த முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டது. அச்சேவை தற்காலிகமாக நிறுத்திய அரசு மீண்டும் சேவை தொடர்ந்து ஒலிபரப்புவதற்கு அனுமதி வழங்கியது போதிலும் வடக்கு கிழக்கு பிரிவினைக்கு ஆதரவாக வானொலி செயற்பட வேண்டும் என அரசாங்கம் வைத்த வோண்டுகோளை நிராகரித்த ரிபிசி இலங்கை ஒலிபரப்பு கூட்டத்தாபனத்துடனான சேவையினை இடைநிறுத்தி கொண்டது.

ரிபிசி வானொலியின் வாரந்த வெளியீடாக பூ. சீவகனை ஆசிரியராகக் கொண்டு வான்முரசு பத்திரிகை வெளியிப்பட்டது. புலிகளின் அடாவடி நடவடிக்கை காரணமாக அவ் வெளியீடும் நிறுத்தபட்டது.

இவ் வானொலியில்  புலிகளால் அல்லது அரசினால் கொல்லப்பட்ட அரசியல் தலைவர்கள் புத்திஜீவிகள் பத்திரிகையாளர்கள் கல்விமான்கள் போராளிகள் மனித உரிமைவாதிகள் ஆகியோருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் அல்லது விசேட ஒலிபரப்புகளையும் நடாத்தியுள்ளது. அத்தோடு மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மாவீரர் தின உரையினை முதன் முதலாக வன்னியில் இருந்து நேரடியாகப் பெற்று ஒலிபரப்பியதுடன் கருணாவின் மாவீரா தின உரையினையும் முதன் முதலாக ஒலிபரப்பியது.

கடந்த 10 ஆண்டுகளாக வாரந்த அரசியல் ஆய்வினை விஸ்வலிங்கம் சிவலிங்கம் தொகுத்து வழங்கி வருவதோடு அதிக நேயர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல் அமைந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சமூக சிந்தனையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள் கலந்து கொண்டு கருத்துகளை சுதந்திரமாக பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் செல்லதுரை ஜெகநாதன் தொகுத்து வழங்கும் அரசியல் அரங்கம் மக்கள் மனங்களை கவர்ந்த நிகழ்ச்சியாக திகழ்கிறது.

பல ஜனநாயக சக்திகள் கருத்து முரன்பாடுகள் காரணமாக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவிட்டாலும் வானொலியை பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வத்துடன் செயற்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

சர்வதேச ரீதீயாக ஒலிபரப்பாகிவரும் தமிழ் வானொலிகள் மாற்றுக் கருத்துக்கான முதன்மை வானொலியாக 10 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் தனது சேவையை ஆற்றியுள்ளது.  அனைவரும் தங்களுக்கான கருத்து சுதந்திரத்தை இவ் வானொலி ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரிபிசியின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. ரிபிசி வானொலி பணிப்பாளர் வீ.இராமராஜின் 11வது ஆண்டின் விசேட உரை சனிக்கிழமை ஒலிபரப்பாக உள்ளதுடன்   புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கலையகம் திறந்து வைப்பதுடன் 10 சிறப்பு விருந்தினர்கள் இணைந்து கொண்டு மங்கல விளக்கேற்றி வைக்க உள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • T Constantine
    T Constantine

    I understand Mr Daya Idaikadder also a guest of honour. I wonder on what category he fits in!!

    Is he – Progressive? Leftist? , Marxist? , Communist? LTTE? Anti LTTE? Humanist? Capitalist? Democrat? Liberal? Labour? Trade Unionist?

    OR ALL ABOVE??

    Most probably – Opportunist category.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வானொலியின் நிகழ்ச்சியினை இலங்கையின் புகழ் பூத்த வானொலி அறிவிப்பாளர் திருமதி மயில்வாகனம் மும்மத பாடல்களை ஒலிபரப்பி ஆரம்பித்து வைத்தார். //

    திருமதி மயிலவாகனம் அறிவிப்பாளராக இருக்கவில்லை. அமரர் திரு மயில்வாகனம் அவர்கள் தான் இலங்கை வானொலியில் புகழ் பூத்த அறிவிப்பாளராக இருந்தார்.

    Reply
  • thurai
    thurai

    ரிபிசி இன் சேவைகளிற்கும்,அதன் பணிப்பாளர் வீ.இராமராஜ் அவர்களிற்கும் எனது வாழ்த்துக்கள்.
    துரை

    Reply