அரசியலமைப்பு மாற்றத்திற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அங்கீகாரம் – அலரி மாளிகையில் ஜூன் 7இல் வருடாந்த மாநாடு

alavi.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜூன் மாதம் 7 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் கூடிய போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா நேற்றுத் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள வருடாந்த பொதுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தின் போது பல்வேறு அரசியல், முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங்கம் அடுத்தடுத்து அமோக வெற்றியீட்டியதையடுத்து அலரிமாளிகையில் முதற்தடவையாக இந்த மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளதால் இம்முறை பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் நாட்டினதும், மக்களினதும் நலனை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு உட்பட பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.

அரசியலமைப்பு மாற்றங்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள், பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான அங்கீகாரத்தையும் மத்திய குழு வழங்கியதாக ஆளுநர் அலவி மெளலானா குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு மாற்றங்கள், மறு சீரமைப்புக்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக 7 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாகப் பேசப்பட்டதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அடுத்து முன் வைக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *