3 மாத செலவீனத்துக்கு 44,014 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி சபைக்கு அறிவிப்பு. அரசியலமைப்பை மீறும் செயல்; ஐ.தே.க.எதிர்ப்பு

parliament.jpgஅரசின் 3 மாத செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள அதேநேரம், கணக்கு வாக்கெடுப்புப் பிரேரணையோ அல்லது வரவுசெலவுத்திட்டமோ பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல் அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்வது அரசியலமைப்பை மீறும் செயலென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

அச்சமயம் ஜனாதிபதியின் அறிவிப்புகளை வாசித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 150 (3) ஆம் பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியத்திலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்க அனுமதியளிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாக கூறினார்.

இதன் பின்னர் சபையில் ஏற்பட்ட சர்ச்சையொன்றின் போது ஐ.தே.க.வின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர முதலில் இது குறித்த பிரச்சினையை கிளப்பினார். “பாராளுமன்றத்தின் அதிகாரம் அவமதிக்கப்பட்டுள்ளது. நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது.

அரசியலமைப்பின் 150 (3) சரத்தின் பிரகாரம் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது  என்று அவர் இதன்போது கூறினார்.

இதேநேரம், ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பி இவ் விவகாரத்தை அரசியலமைப்பை மேற்கோள்காட்டி விளக்கிய ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான விஜேதாச ராஜபக்ஷ “அரசியலமைப்பின் 150 (3) ஆவது சரத்தின் பிரகாரம் கூறப்படுவது என்னவென்றால், நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படாத நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து 3 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்க முடியும் அல்லது நிதி ஒதுக்கீடு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்காத நிலையில் தேர்தலொன்றுக்காக திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறான எந்த சந்தர்ப்பமும் இல்லாததால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு முரணானது என்றார். எனினும் விஜேதாச ராஜபக்ஷவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா;

“அரசியலமைப்பின் 150 (3) சரத்துக்கு உட்பட்டே ஜனாதிபதி தனது அறிவிப்பை சபாநாயகர் மூலம் விடுத்திருக்கிறார். சட்டமா அதிபரின் பூரண ஆலோசனையின் பிரகாரமே இது செய்யப்பட்டிருக்கிறது. எனவே, விஜேதாச ராஜபக்ஷவின் ஆலோசனை ஜனாதிபதிக்குத் தேவைப்படாது. சட்டமா அதிபரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றால் உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு நீங்கள், நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். ஜனாதிபதி அனுப்பிய அறிவித்தலை விவாதத்துக்கு உட்படுத்த முடியாது  என்றும் தெரிவித்தார்.

எனினும் இது உயர்நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையில்லை என்றும் இதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது என்றும் இதில் சபாநாயகரே முடிவு சொல்ல வேண்டும் என்றும் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

இதேநேரம், அரசியலமைப்பின் 150 (3), 150 (4) சரத்துகளின் பிரகாரம் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக ஆளுந்தரப்பு எம்.பி.யான லலித் திசாநாயக்க தெரிவித்தார். ரணில்இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க;

“ஜனாதிபதி அனுப்பிய உத்தரவின் பிரதியொன்றை எமக்குத் தாருங்கள். 2000 ஆம் ஆண்டில் அப்போதைய சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க சட்டமா அதிபரின் அதிகாரம் தொடர்பில் நிலைப்பாடொன்றுக்கு வந்தார். பாராளுமன்றத்துக்கு சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருவதற்கு மட்டுமே சட்டமா அதிபரின் ஆலோசனை அவசியமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. எனவே, பாராளுமன்ற அங்கீகாரம் இன்றி அநுர பண்டாரநாயக்கவின் தீர்ப்பை மாற்ற முடியாது.எனவே, இவ்விடயத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப் பார்க்கிறீர்கள். இதை நாமே தீர்க்க முடியும். பாராளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கிறது. பாராளுமன்ற அதிகாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்குள்ளது.

இந்த விடயம் பற்றி ஆராய்ந்து உரிய உத்தரவைப் பிறப்பிப்பதாகவும் இதை விவாதமாக்கிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *