தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: – ஆதரவு திரட்ட கட்சிகள் இறுதிநேர பிரயத்தனம்

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இறுதிக்கட்ட தேர்தல்பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பிரதான கட்சிகளின் முக்கிய கூட்டங்கள் பிரதான நகரங்களில் நடத்தப்படவுள்ளன. ஐ. ம. சு. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மித்தெனியவில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தவிர அமைச்சர்கள் தலைமையிலான முக்கிய கூட்டங்களும் பல மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியும் இன்று பலபிரசாரக் கூட்டங்களை நடத்த உள்ளது. ஐ. தே. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மாலை கொழும்பு பஞ்சிகாவத்தையில் நடைபெறும். ஜனநாயக தேசிய முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜே. வி. பி. தலைவர்கள், மற்றும் அநோமா பொன்சேகா ஆகியோரின் தலைமையில் கம்பஹாவில் நடைபெற உள்ளது. இதேவேளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் நாளை (6) முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்கவுள்ளதோடு 7ஆம் திகதி வாக்குப் பெட்டிகள் எடுக்கச் செல்லப்பட உள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் குலதுங்க தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வெற்று வாக்குப் பெட்டிகளுக்குள் ‘ஸ்ரிக்கர்’ ஒன்றை ஒட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அவ்வாறு ‘ஸ்ரிக்கர்’ ஒட்ட விரும்பும் பிரதிநிதிகள் தேர்தல் தினம் காலை 6.30 மணிக்கு முன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு கேட்கப்படுகின்றனர். அதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் ‘சீல் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சில தொகுதிகளில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் அந்தப் பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவரை உதவியாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *