கண்டிக்கு நான் ஒன்றும் புதிதானவன் அல்ல- மனோ கணேசன்

mano-ganesan.jpgகண்டி மாவட்டத்தில் நான் போட்டியிட இருப்பதை கண்டு ஜாதிக ஹெல உருமயவும், எமது சொந்த இனத்தை சார்ந்த சில தமிழ் ஹெல உருமய காரர்களும் எனக்கு தடைபோட நினைக்கின்றார்கள். கண்டிக்கு நான் புதிதாக வரவில்லை. கண்டியிலிருந்தே கொழும்புக்குச் சென்று அங்கே எமது மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்திவிட்டு இன்று மீண்டும் எனது கண்டிக்கு திரும்பி வருகின்றேன் என்பதை இந்த நண்பர்கள் தேடி அறிந்துக்கொள்ளவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் கண்டிக்கு வரக்கூடாது என்று கூறி ஜாதிக ஹெல உருமய நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

எனது தந்தைவழி சொந்த ஊர் கண்டி. கண்டி மாநகரத்தையொட்டிய அம்பிட்டிய கிராமத்திலேயே எனது தந்தை பிறந்திருந்தார். நான் கல்விக்கற்றது கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியிலாகும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கு முன்னர்வரை எனது இளமைக்காலம் முழுவதிலும் கண்டி மாநகரத்திலேயே வாழ்ந்திருக்கின்றேன். இதுவே கண்டி மாவட்டத்தில் நான் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதன் பிரதான பின்னணி காரணம் ஆகும்.

கண்டி மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்ஸிம் மக்களும், சிங்கள சகோதர்களும் எனது சொந்த மக்களாகும். எனது மக்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டே நான் இத்தீர்மானத்திற்கு வந்திருக்கின்றேன். எனவே எனக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்து பொய் பிரசார கருத்துகளை தெரிவித்து எனக்கு தடைபோடுவதற்கு எவராலும் முடியாது.

1994ம் ஆண்டிற்கு பிறகு ஒர் தமிழர்கூட பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை. கடந்த 2000, 2001, 2004 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மூன்று பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழர்கள் தோல்வியடைந்தார்கள். சில தரப்பினர் உள்ளேயும், வெளியேயும் இருந்தப்படி தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சதி செய்து தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

கடந்த பாராளுமன்றத்திலும் கண்டி மாவட்டத்தின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களிலே 9 பேர் சகோதர சிங்கள இனத்தையும், 3 பேர் சகோதர முஸ்லிம் இனத்தையம் பிரதிநிதித்துவம் செய்தார்கள். ஏன் எங்கள் இனத்திற்கு நம்மவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்குரிய ஜனநாயக உரிமை இல்லையா? கண்டி மாட்ட தமிழ் மக்களின் துணையுடன் சகோதர சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் ஏழாவது பாராளுமன்றத்திலே கண்டி மாவட்டத்தில் தெரிவு செய்யப்படுவதன் மூலம் எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நான் மீட்டெடுத்து நிலை நாட்டியே தீருவேன். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *