கண்டி மாநகர சபை மேயர் எல்.பி.அலுவிகாரவை திடீரென பதவி நீக்கம் செய்தமை மத்திய மாகாண முதலமைச்சரின் நியாயமற்ற செயல் என்பதனை சுட்டிக்காட்டி ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபையை விட்டு வெளி நடப்பு செய்ததால் கூட்டம் 15 நிமிடங்களுடன் முடிவடைந்தது.
கண்டி மாநகரசபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை பதில் மேயர் தலைமையில் கூடியது. இதன்போது ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி.உறுப்பினர்கள் சிலருமாக கண்டி மாநகர சபையின் மேயர் எல்.பி.அலுவிகார பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கைகளில் கறுப்புப்பட்டிகளை அணிந்து வந்திருந்தனர்.
கூட்டம் ஆரம்பமானதும் ஜே.வி.பி.உறுப்பினர் ஆனந்த கோணவல, மேயர் பதவி நீக்கப் பட்டமையானது முதலமைச்சரின் நீதி நியாயமற்ற செயலெனச் சுட்டிக்காட்டினார். ஏனைய சில உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து சபையிலிருந்து வெளியேறினர். இதனையடுத்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 18 நிமிடங்களுடன் சபை கலைந்து சென்றுள்ளது.