தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்களே தேவை.- முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

அரசியலில் இறங்கும் உத்தேசம் எதுவும் தனக்கு இல்லையென்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுமுகங்களைக் களமிறக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாகவும் அதில் நீதியரசர் விக்னேஸ்வரன் , பேராசிரியர் சி.கே.சிற்றம்பலம் மற்றும் யாழ்.மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் அடங்கியிருப்பதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பாக தற்போது தமிழகத்தில் இருக்கும் முன்னாள் நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் சார்பிலான பொது வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு தன்னிடம் கேட்கப்பட்டதைப் போன்றே பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்வருமாறு கேட்கப்பட்டதாகவும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடும் உத்தேசம் தனக்கு இல்லையென்றும் திட்டவட்டமாகப் பதிலளித்துவிட்டதாகவும் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுதாபிகளான முக்கியஸ்தர்கள் சிலர் தன்னை அணுகி தேர்தலில் போட்டியிட முன்வருமாறு கேட்டபோது அவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய அளவுகோல் குறித்து சில ஆலோசனைகளை முன்வைத்ததாகக் கூறிய விக்னேஸ்வரன் “பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்களே தேவை. அதனால், அத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட கற்றறிந்த பிரமுகர்களையே வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *