தகவல், ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியால் பொறுப்பேற்பு

தகவல், ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி மேற்படி அமைச்சைப் பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளேன். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் அமைச்சுப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதியை கோரியுள்ளேன்.

அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஊடக அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்கிறார். எனவே அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இந்த ஊடகவியலாளர் மாநாடு நான் பங்குபற்றும் இறுதி ஊடகவியலாளர் மாநாடாகக் கூட இருக்கலாம். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் அடங்களான சகல தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *