வன்முறை அரசியல் கலாசாரம் தலைதூக்க இடமளியேன் தங்காலையில் ஜனாதிபதி ராஜபக்ஷ

mahindaநாட்டில் இன்னொரு தடவை பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லையெனவும் வன்முறைக் கலாசாரத்தை அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசியல் சுயநலனுக்காக இளைஞர்களை பலிக்கடாவாக்க வேண்டாமென எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பது தனது கடப்பாடு எனவும் அதற்கு ஊறு விளைவிக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.தங்காலை நகர மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாவது;

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இன்றுதான் உங்களைச் சந்திக்கின்றேன். என்னை மீண்டுமொரு தடவை உங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தமைக்காக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அரசியல் என்பது வன்முறையாகவோ, பழிவாங்குவதாகவோ இருந்துவிடக்கூடாது. வன்முறைக்கலாசாரம் தலைதூக்கினால் நாட்டின் எதிர்காலம் மிக மோசமானதாக அமைந்துவிடும். மக்களை அச்சுறுத்தி அரசியல் நடத்தும் கலாசாரத்துக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துள்ளேன்.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் அரசியல் செய்யும் உரிமை உண்டு. அதனை எவராலும் நிராகரிக்க முடியாது. ஆனால், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சிகளுக்கு யாருக்கும் இடமளிக்க முடியாது.நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள சமாதானம், ஐக்கியம் என்பவற்றை சீர்குலைப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இன்று தோல்வியை ஜீரணிக்க முடியாத சில அரசியல் சக்திகள் நாட்டை மீண்டும் பயங்கரவாதத்தின் பக்கம் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றன. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த நாட்டை பல சவால்களுக்கு முகம் கொடுத்து நாம் மீட்டெடுத்துள்ளோம். நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சக்திகள் இன்று மூக்குடைபட்டுப் போயுள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊழியர் உட்பட நாட்டுமக்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டனர். வரலாற்றில் ஒருபோதுமில்லாத வகையில் என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் சேறு அள்ளி வீசப்பட்டது. அவற்றுக்கு நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களில் கணிசமான மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக நான் அப்பகுதிகளை ஓரங்கட்டப் போவதில்லை. எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் இன்று நானே ஜனாதிபதி. எல்லோரையும் எனது நாட்டு மக்களாகவே கருதுகின்றேன். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். எனது கடப்பாடு கூட நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது தான். இன்னொரு தடவை இளைஞர்களை பலிகடாவாக்க முனைய வேண்டாமென எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன். அரசியல் செய்யுங்கள் அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது. ஆனால் அரசியல் செய்வதற்காக வன்முறைக் கலசாரத்தைத் தேர்ந்தெடுக்காதீர்கள். அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அரசாங்கமும் இடமளிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன். இக் கூட்டத்தின் போது நாமல் ராஜபக்ஷ தனது முதல் அரசியல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

Show More
Leave a Reply to Roman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Roman
    Roman

    சாத்தான் வேதம் ஓதினால், இயமன் பென்சனில் போனால், பாப்பாண்டவர் கருத்தடையினை அனுமதித்தால் ராசபக்சவின் அரசாங்கம் வன்முறையில் இருந்து சோசலிசம் நோக்கி போகும்

    Reply