மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகையில் நாளுக்கு நாள் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உத்தரவாத விலையினை வெளியிட்டு நெல்லினைக் கொள்வனவு செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கை சிறிதுகாலம் மழை இல்லாது பாதிக்கப்பட்டதுடன், பின்னர் அதிக மழை பெய்ததாலும் பாதிக்கப்பட்டது. இறுதி நேரத்தில் கபில நிறத்தத்தி, இலைச்சுருட்டி புழு போன்ற பூச்சித் தாக்கத்தினால் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கூடுதலாகச் செலவு செய்து கிருமி நாசினிகளைப் பயன்படுத்தினர்.
இரண்டாயிரத்து முந்நூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்ட நீட்டு வெள்ளை இன நெல் தற்போது ஆயிரத்து அறுநூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லின் விலையை வியாபாரிகளே தீர்மானிக்கும் நிலை இன்று உள்ளதால் வியாபாரிகள் தங்களது தேவைக்கேற்ப நாளுக்கு நாள் குறைத்துகொண்டு செல்கின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலையிட்டு உத்தரவாத விலையினை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.