பொன்சேகா மீண்டும் தேர்தல் களம் இறங்குகிறார்

sarath.jpgபாராளு மன்றத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி போட்டியிடவுள்ளது. அதேசமயம், ஜெனரல் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதையும் ஐ.தே.மு. எதிர்க்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியல்ல இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்ற தினத்திலிருந்து தேர்தல் முடிவுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் திருப்தியற்ற நிலைமை காணப்படுகின்றது. இதே நிலைமையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியிலும் காணப்படுகிறது. தேர்தல் ஆணையாளரின் அறிக்கையில் வாக்குப்பெட்டியொன்றைக் கூடப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது என்று தெரிவித்ததே இதற்குக் காரணமாகும்.

தேர்தல் வாக்குப் பெட்டியைப் பாதுகாக்க முடியாது போனால் அதிலுள்ள வாக்குகளில் முடிவினை எப்படி ஏற்பதென மக்கள் கேட்கின்றனர். தேர்தல் காலத்தில் அரச ஊடகங்கள் நீதிக்குப் புறம்பாக ஒருபக்கம் சார்ந்து செயற்பட்டது. நீதிமன்ற உத்தரவினை மீறியும் தேர்தல் ஆணையாளரின் கடிதங்கள் மூலமான வேண்டுகோளையும் மீறி அவை செயற்பட்டன. இவ்வாறு அரசாங்கம் தேர்தல் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டது. எனவே, தேர்தல் ஆணையாளரின் கூற்றுப்படி பார்க்கும்போது தேர்தல் முடிவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதென்பது புலனாகின்றது.

தேர்தலுக்குப் பின்னர் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா சுற்றிவளைக்கப்பட்டது போன்றவாறான நிலைமையேற்பட்டுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடனே வெளிவந்துள்ளது. ஆனால், இம்முறை அவரது கையொப்பம் இல்லாது முடிவுகள் மின்னஞ்சல் மூலம் வெளியானது.

இந்த முடிவு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆராய்ந்துவரும் அதேநேரம், இது குறித்த சாட்சியங்களைப் பெற்று வருகின்றோம். இது தொடர்பான ஆதாரங்களை,சாட்சியங்களை அறிவிக்குமாறு முகவர்களிடம் கட்சித் தலைவர் கோரியுள்ளார். எதிர்வரும் 10 தினங்களுக்குள் சட்டநடவடிக்கை எடுப்பது சாத்தியமாகுமென நம்புகின்றேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். இதற்கான முடிவு ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்டத் தலைவர்களின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டுள்ளது. யானைச் சின்னத்தில் போட்டியிடுவது ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிப்பதென்றும் இதன் பின்னர் தனித் தனியாகப் போட்டியிடுவதெனவும் தேர்தலுக்கு முன்னரே தீர்மானித்திருந்தோம். இதன் பிரகாரம் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளோம். எமது முன்னணியில் உள்ள தலைவர்கள் ஜெனரல் பொன்சேகா போட்டியிடுவதை எதிர்க்கவில்லையெனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *