மாகாண சபைத் தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை மீள வழங்காது வைத்திருக்கும் வாக்காளர்கள் அவற்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்த முடி யும் எனத் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தேர்தல்கள் தலைமையகம் தற்காலிக அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்தது. எனினும் அந்த அடையாள அட்டைகளைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்
மீள ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வாக்காளர்கள் அந்தத் தற்காலிக அட்டைகளை மீள ஒப்படைக்காது தம்மிடமே வைத்துள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த வாக்காளர்கள் மீள ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த முடிவை அறிவித்ததாக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார்.
தேர்தல்கள் தலைமையகம் விநியோகிக்கும் தற்காலிக அட்டைகளைப் பெற்றுக்கொள்வத ற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனினும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வழங்கும் தற்காலிக அட்டைகளைப் பெறுவதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என்று மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.
தேர்தல்கள் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என எந்த வாக்காளரும் ஆதங்கப்பட வேண்டியதில்லை என்றும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையைத் தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள், காலாவதியாகாத கடவுச் சீட்டு, காலாவதியாகாத சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் மத குருமார்களுக்கான அடையாள அட்டை, தற்காலிக அட்டை அல்லது தேர்தல்கள் தலைமையகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.