குவைத்தில் பணியாற்றும் இலங்கையர்கள் ஏதாவது பிரச்சினையின் காரணமாகத் தொழில் செய்யும் இடத்திலிருந்து வெளியேற நேரிட்டால், நேரடியாகக் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வருமாறு தூதுவர் கே. எஸ். சீ. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
அவ்வாறில்லாமல் நண்பர்கள், தெரிந்தவர்கள் இடத்தில் தங்கியிருப்பதன் மூலம் பொலிஸ் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாகத் தூதரகத்திற்கு வருவார்களாயின், அவர்களின் பிரச்சினைகளைத் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடித் தீர்த்து வைப்பதுடன் விரும்பும் பட்சத்தில் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தூதுவர் குறிப்பிட்டார்.
பணிபுரியும் வீடுகளிலிருந்து தப்பிவந்த 210 பேர் இன்னமும் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தாகக் கூறிய தூதுவர், அவர்களையும் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களையும் நாட்டுக்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தூதுவர் கூறினார்.
குவைத்தில் பணியாற்றுவதற்காக வரும் இலங்கையர்கள் வந்த ஓரிரு வாரங்களிலேயே தொழில் செய்ய முடியாமல், வீடுகளிலிருந்து தப்பியோடுகின்றனர். அவ்வாறு தப்பியோடு வோருக்கு எதிராக வீட்டுரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி இறுதியில் நாடு கடத்தப்படுகின்றனர்.