அம்பாறை, மட்டு. மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை; வெள்ள நிலை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையால் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், மேற்படி இரு மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாக பிரதேச செயலகங்கள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நலகிரிக்குளத்தின் வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளது. இருந்த போதும், முகத்துவாரம் வெட்டப் பட்டுள்ளதால், ஆற்றுநீர் முகத்துவாரம், கல்லாறு வாவிகள் ஊடாக கடலில் சங்கமமாகின்றது. கிராமங்கள், வீதிகளில் வடிகான்கள் இன்மையால் வெள்ள நீர் தாழ் நிலங்களில் தேங்கிக் கிடப்பதால், பல வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று, மண்முனை, தென் எருவில்பற்று, பட்டிப்பளை, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுகள் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி, பழம்தோட்டம், எருவில, மகிளூர், மகிளூர்முனை, நாகபுரம், குறுமண்வெளி, பட்டிருப்பு, களுதாவளை, போரதீவு, முனைத்தீவு, வெல்லாவெளி, அம்பலாந்துறை, வேத்துச்சேனை, ஆணை கட்டியவெளி, ராணமடு, சின்னவத்தை, பலாச்சோலை, இருதயபுரம், மஞ்சந் தொடுவாய், காத்தான்குடி, ஆரையம்பதி, புதூர், கல்லடி மற்றும் செங்கலடி போன்ற கிராமங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தின் காரணமாக, வேத்துச் சேனை, காக்காச்சிவட்டை கிராமங்களில் ஐவர் விசப்பாம்புகளின் கடிக்கு இலக்காகினர். வெள்ளத்தின் காரணமாக களுவா ஞ்சிக்குடியில் துவிச்சக்கரவண்டி பழுது பார்க்கும் கடை ஒன்றும், வேத்துச் சேனைக் கிராமத்தில் நான்கு வீடுகளும் விழுந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம் பகல் 11.30 மணி வரை ஆகக் கூடுதலான 18.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பாளர் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்றுக் காலை 8.30 மணி வரை 20.7 மில்லி மீற்றர் மழை மட்டக் களப்பு மாவட்டத்தில் பெய்துள்ளதுடன் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை 794.8 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கு வதற்கான உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்களே நேற்று வரை அறிக்கை செய்தனர். இதற்கேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் இடம் பெயரும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளர்களின் தகவல்களை அடிப் படையாகக் கொண்டு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 5016 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென 100 கூடாரங்களை சர்வோதய நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் வீசிய சுழல் காற்றின் காரணமாக சென்றல் கேம்ப் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலை, கடை என்பவற்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள 1000 ற்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள கல்முனை – சென்றல்கேம்ப் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதியில் ஏற்பட்டுள்ள சிதைவுகளை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை செப்பனிட்டு வருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *