இலங் கையில் சமாதான சூழல் காணப்படுவதுடன், பாதுகாப்பு நிலைவரம் சீரடைந்துள்ளதால் கனடா அரசு இலங்கை தொடர்பாக பேணிவந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பிரயாணக்கட்டுபாடுகளைத் தளர்த்தியுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் இலங்கையில் அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று கனடா அரசு தெரிவித்துள்ள போதிலும் இலங்கைக்கு விஜயம் செய்யும் அந்நாட்டுப் பிரஜைகள், இலங்கைக்குள் அனாவசிய பிரயாணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா தூதுவர் புரூஸ் லெவி, விடுதலைப் புலிகளுடனான தீவிரயுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கை புதிய யுகம் ஒன்றிற்குள் பிரவேசித்துள்ளதை இது எடுத்து காட்டுகின்றது. புலம்பெயர் இலங்கையர்கள் மிகக் கூடுதலாகக் கனடாவில் குடியேறியுள்ள நிலையில் அதிக அளவிலான கனேடிய மக்கள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய பிரஜாவுரிமை பெற்ற அநேகமான இலங்கையர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இலங்கைக்கு வருகைதரலாம் என்று நம்புகிறோம் என்று கூறினார்.