சமூகத்தின் எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்க முடியாமல் ஹக்கீம் தடம்புரள்கிறார் – மு.கா. முன்னாள் உறுப்பினர் அப்துல் கபூர்

அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க திரவெடுத்த தோள்களோடு திரண்டு நிற்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது போன்று சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கவோ ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ முஸ்லிம் சமூகம் அரசியல் சாணக்கியம் அற்றவர்கள் அல்ல. இவ்வாறு கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான ஏ. அப்துல் கபூர் தெரிவித்துள்ளார். அப்துல் கபூர் இது விடயமாக மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவுமே முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். கால நேரத்துக்குப் பொருத்தமான வகையில் அரசியல் வியூகம் வகுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்களோடு பேசி முஸ்லிம் சமூகத்திற்கு உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொடுத்தார்.

தென் கிழக்குப் பல்கலைக்கழம், ஒலுவில் துறைமுகம் இதற்கு நல்ல உதாரணங்களாகும். மர்ஹும் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரவூப் ஹக்கீம் அரசியல் வியூகம் அற்று சமூகத்தின் எதிர்காலம் கருதி தீர்மானங்களை எடுக்க முடியாமல் தடம்புரள்கிறார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த காலம் முதல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் சகல விதமான மத கலாசார உரிமைகளையும் பெற்று தங்களது இருப்பையும் உறுதிப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள் என கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *