ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் 50 ஓவர்களை 40 ஆகக் குறைக்கத் திட்டம்

ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. தற்போது உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி. ஆலோசித்து வருகிறது. கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான “ருவென்ரி20” போட்டிகளின் வருகைக்குப் பின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) உள்ளது.

ஒருநாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர ஐ.சி.சி. குழு முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக் குழுவின் தலைவராக முன்னாள் மேற்கிந்திய கப்டன் கிளைவ் லொயிட் உள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள 50 ஓவர்களை 40 ஆகக் குறைக்க ஐ.சி.சி. ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர “ருவென்ரி20” போட்டிகளைப் போல துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்படவுள்ளது. அடுத்த இரண்டு பந்துவீச்சாளர்களுக்குத் தலா 10 ஓவர்களும் ஐந்தாவது பந்துவீச்சாளர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும்.

இதன் மூலம் திறமையான பந்துவீச்சாளர்களை அணியின் கப்டன்கள் கூடுதலாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 25 ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி. கிரிக்கெட் குழு எடுத்துள்ள இம் முடிவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகளுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *