பாதுகாப்பு செயலாளர் நியமனத்துக்குப்பின் எந்தவொரு சொத்தையும் வாங்கவில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

gothabaya.jpgஎதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகாவும் விடுக்கும் அனைத்து குற்றச் சாட்டுக்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு கடந்த சனிக்கிழமை வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

புலிகளின் சொத்து மற்றும் அந்த சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் ஊழல் மோசடி உட்பட விடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் மக்கள் மற்றும் படையினரின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் விடுக்கப்பட்ட பொய்க் குற்றச் சாட்டுக்களாகும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

தான் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டது. முதல் எந்தவொரு சொத்தையும் கொள்வனவு செய்யவில்லை என்று இப் பேட்டியின் போது கூறிய பாதுகாப்பு செயலாளர், அவ்வாறு கொள்வனவு செய்திருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுமாறு அவர் சவால் விடுத்தார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு வங்கியிலும் தனது பெயருக்கு உள்ள சொத்துக்களை தேடிப் பார்க்க அனுமதி வழங்கும் பகிரங்க கடிதமொன்றை வழங்க தான் தயாராக இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

அப்பேட்டியில் அவர் தொடர்ந்து கூறியதாவது:- ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 60 வருடங்களில் நாட்டுக்கு இழைத்திருக்கும் மிகப் பெரிய துரோகம் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதாகும். அந்த உடன்படிக்கையின் படி சட்ட பூர்வமாக உருவாக்கப்பட்ட படையினருடன் புலிகள் இயக்க தீவிரவாதிகள் சமமாகக கருதப்பட்டனர். படை அதிகாரிகள் தீவிரவாதிகளுடன் கை குலுக்கி சமாதானம் பற்றிப் பேசவும் நேர்ந்தது என்று பாதுகாப்பு செயலாளர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை கிட்டத்தட்ட 3 ஆயிரம் தடவைகள் மீறப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதிருந்தது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்புத் தலைவர் கே. பி. கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறிவருகிறார் என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

அரசாங்கத்தினால் நம்பிக்கை மீறப்பட்டிருந்தால் கே. பி. யை கைது செய்திருக்க முடியாது. ஏனெனில் அதற்கு சில வாரங்களுக்கு முன் செனல் 4 தொலைக்காட்சி சேவை கே. பி. யை பிரபாகரனின் வாரிசு என அறிவித்திருந்தது.  எனவே எமது புலனாய்வு அதிகாரிகள் கே. பி. யை கையாளுவதுடன், அவரை விசாரித்தும் வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானவை. இதில் சில சட்டபூர்வ வர்த்தகங்களாகவும் உள்ளன. சில நாடுகளில் புலிகளின் தொடர்புகளை எம்மால் கையாள முடிந்திருக்கிறது. ஆனால் சில நாடுகளில் அது கஷ்டமாக உள்ளது. விரைவில் கே. பி. யின் சொத்து பற்றிய விபரங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கும். சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் கொழும்பில் 90 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 25 பேர்ச் காணித் துண்டொன்றை ஒதுக்கியுள்ளது.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியின் போது கூறியுள்ளார். சரத் பொன்சேகா ஓய்வு பெறுவதற்கு முன் காணி ஒதுக்குவது தொடர்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.  இராணுவ தளபதிக்கு மட்டுமன்றி கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுக்கும் கொழும்பில் காணி ஒதுக்கப்பட வேண்டுமென இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியபோது அவர் கூறியிருந்தார்.  இந்த யோசனையை ஜனாதிபதி அங்கீகரித்ததையடுத்து பாதுகாப்பு அமைச்சு காணிகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான கொழும்பு கிரிமண்டல மாவத்தையில் தலா 10 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை ஒதுக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்தது. குறிப்பிட்ட காணி அமைத்துள்ள இடத்தில் ஒரு பேர்ச் 3.8 மில்லியன் ரூபா பெறுமதியாகும். இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்ததும் அது பற்றி பொன்சேகாவுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் தனது எண்ணத்தில் இருக்கும் வகையிலான வீட்டை கட்டுவதற்கு 10 பேர்ச் காணி போதாது என்று அவர் கூறியதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து தான் மீண்டும் ஜனாதிபதியிடம் சென்று பொன்சேகாவின் நிலையை எடுத்துக் கூறி அதே விலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிட மிருந்து தலா 15 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய குறிப்பிட்டார்.

எனினும் அமைச்சரவை 20 பேர்ச் காணித்துண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியபோதும் பொன்சேகா திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.  அதனையடுத்து இன்றையகாணிப் பெறுமதியில் 90 மில்லியன் ரூபா பெறுமதியான 25 பேர்ச் காணித்துண்டை அரசாங்கம் ஒதுக்கியது. எனினும் தற்போது தனது காணி ஒதுக்குவது தாமதமாவதாக குற்றம் சாட்டி அவர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். ஆனால் குறிப்பிட்ட காணித்துண்டு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    பிரபாகரனை பிடித்த சனியன் இவர்மீதும் ஏறிதான் இறங்கும் போல் உள்ளது;

    Reply
  • sivam
    sivam

    இது கோத்தபாய வழங்கிய தொலைகாட்சி பேடடிக்கு பொருத்தமாக உள்ளது. அவர் சொல்லியிருந்தார் தான் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஆனதன் பின்னர் சொத்துகள் வாங்கவில்லை என்று. வாங்குவதில் இருந்து இது வேறுபடுகின்றது. வாங்காமலும் சொத்துக்கள் சேரலாம். அவர் சொத்துகள் தன்னிடம் இல்லை என்று சொல்லவில்லை. அவர் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து நாடு முழுவதும் நடந்த கொள்ளைகளை சேர்த்து பார்த்தால் கிடத்தட்ட அவர் சேர்த்த சொத்துக்களுடன் சம மாகலாம். குறைய இருக்குமாயின் சகோதரர்களின் பங்கு என்று கருதலாம்.

    Reply
  • sivam
    sivam

    சொத்துகள் வாங்கவில்லையே தவிர கொள்ளை அடிக்க வில்லை என்று அவர் சொல்லவில்லை.

    வானத்தால் போன பொன்சேகாவை இவர் ஏணி வைத்து இறக்கியிருக்கின்றார். எள்ளு எண்ணை எரிப்பதில் இருக்கிறது மீண்டும் வானத்தில் சனியன் ஏறுமோ இல்லையோ என்று.

    K.T. Rajasinham தனது இணையதளத்தில் தினசரி நல்லாக புகை போக எள்ளு எண்ணை எரிக்கின்றார். பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்

    Reply