இலங்கை அகதிகளின் பிள்ளைகள் குறிப்பாக தமிழ் நாட்டிலுள்ள அகதிகளின் பிள்ளைகள் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பை இலவசமாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு அனுமதியளிப்பதென அப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
அடுத்த கல்வியாண்டு தொடக்கம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் இலவசக்கல்வி வழங்கப்படும்.விசேடமாக தொலைக்கல்வியூடாக கல்வியை முன்னெடுக்க விரும்புவோருக்கு இந்தவசதி மேற்கொள்ளப்படும்.அகதிகள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மட்டும் தீர்வாக அமையாது. இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேம்படுத்த சரியான கருவி கல்வியேயாகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறியதாக “ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.அத்துடன், பி.எச்.டி. நெறியை பல்கலைக்கழகங்கள் அல்லது இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முன்னெடுக்க விரும்புவோருக்கு இடஒதுக்கீட்டை மாநிலமட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2010 முதல் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று பேராசிரியர் திருவாசகம் கூறியுள்ளார்.