மனித உரிமைகளுக்கான பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி பிரான்கொய்ஸ் ஸிமரே மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று முன்தினம் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் குறித்தும் அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் மிதிவெடி கண்ணிவெடிகள் காணப்படுவதால் அவற்றை அகற்றுவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மீள்குடியேற்றப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதை, போக்குவரத்து உட்பட இன்னோரன்ன உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கம் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் நாட்டு மனித உரிமைக்கான பிரதிநிதி பிரான்கொய்ஸ் ஸிமரே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியை பாராட்டுவதாகவும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் அம்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் பிரான்ஸ் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் தெரிவித்தார்.