சனல் 4 வீடியோ தொடர்பான இராணுவ விசாரணைகளை அரசு இதுவரை நடத்தவில்லை : மங்கள சமரவீர

mangala2222.jpgஇலங்கை இராணுவம் இன்று உலகில் பிரபல்யம் வாய்ந்த ஒரு படையணியாகப் போற்றப்பட்டாலும்,   இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டாலும்,  இன்று சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை” என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளரும் எம்பியுமான மங்கள சமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  “இராணுவத்தினர் 1982களில் கதிர்காம ரூபசுந்தரி என்ற பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாக லெப்டினன் ஜெனரலாக இருந்த அல்பட் விஜயசூரிய மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு,  சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1970-1980 களில் நாட்டின் இறைமையைப் பாதுகாக்க இரணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் கடந்த 20 வருட காலமாக நிலவிய யுத்தத்தின் போதும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் அங்கவீனர்களாயினர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் மேலும் 1994 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் பொல்கொல்லை கங்கையில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான நபர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 1996இல் இராணுவத்தினரால் கிரிஷாந்தி குமாரசுவாமி என்ற மாணவி மீதான துஷ்பிரயோக வழக்கில் பல இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உலகிலுள்ள சிறந்த இராணுவப் படைகளுக்கு எதிராகவும் கூட எத்தனையோ குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. உலகில் சிறந்த இராணுவமாகக் கருதப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மீதும் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் எழும்போதெல்லாம்இ உரிய விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக அந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க,  எமது இராணுவத்தினர் 60 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது,  வரலாற்றில் இல்லாத பல குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் எமது இராணுவத்தினர் மீதும் அரசு மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரசாங்கமோ இது தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் இதுவரை நடத்தவில்லை. இது எமது இராணுவத்தினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கெதிராகவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினர் பற்றிக் கதைத்தாலும் தற்போது அவர்களைப் பற்றி எவருமே பேசுவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்டவர்களை மறந்து விட்டார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *