நாளை மறுதினம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
தேர்தல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதோடு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் இன்று பிற்பகல் முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்க உள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் 16 ஆயிரம் பொலிஸார் நாளை முதல் கடமையை பொறுப்பேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.
நேற்றைய தினம் தென்மாகாணத்தில் பல இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய பிரதான கட்சிகள் பல பிரதான கூட்டங்களை நடத்தின.
தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 17 இலட்சத்து 61,859 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் 670 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளது. தபால் மூல வாக்குகள் எண்ணும் 13 நிலையங்கள் உட்பட 161 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.